பக்கம் எண் :

சீறாப்புராணம்

1673


இரண்டாம் பாகம்
 

இலகுவில் தீராது. முழுவதுங் கொல்லுதலை நிச்சயித்து இருக்கின்றது.

 

4608. கொண்ட லன்றிமற் றிருந்திசை திசைதொறுங் கொடிய

     வண்ட மும்வெடித் திடத்தொனி யடிக்கடி யறைந்த

     துண்டு மற்றுருக் கண்டில மூழ்விதி யதுவு

     மிண்டு வல்வினை மூட்டுமோ வறிகில மெய்யா.

170

     (இ-ள்) அன்றியும், குளிர் காற்றல்லாமல் வேறு எல்லாத் திக்குகளிலும் ஆகாயமும் வெடிக்கும் வண்ணங் கொடிய ஓசையானது அடிக்கடி முழங்கின துண்டு வேறோர் தோற்றத்தையுந் தெரிந்திலோம். நமது ஊழ்விதியும் மெய்யாக நெருங்கிய வலிய தீவினையை மூளச் செய்யுமோ? அதையு முணந்திலோம்.

 

4609. ஐய கோவுயி ரிருந்தல்லோ திடத்துட னடும்போர்

     செய்ய வேண்டுமிங் கிருப்பது பழுதினித் திறத்தீ

     ருய்ய லாம்படி யூரினிற் போமினென் றுரைத்தான்

     வையம் போற்றிய கறுபுவந் தீன்றிடு மதலை.

171

     (இ-ள்) அன்றியும், இவ்வுலகமானது துதிக்கின்ற ஹறுபென்பவன் விரும்பிப் பெற்ற புதல்வனான அந்த அபாசுபியானென்பவன் அந்தோ! வலிமையையுடைய வீரர்களே! பிராண னிருந்தல்லவா? தைரியத்தோடுங் கொல்லுகின்ற யுத்தத்தைச் செய்ய வேண்டும். ஆதலால் இனி இவ்விடத்தில் நாமிருப்பது குற்றம். பிழைக்கும் விதத்தில் நீங்கள் உங்களுங்கள் நகரங்களிற் போய்ச் சேருங்களென்று சொன்னான்.

 

4610. விடியு முன்னமே யானுமே குவனென விரைவி

     னெடிய காற்றளை யவிழ்க்குமுன் னெடும்பரி மேற்கொண்

     டடிய டித்துமுன் னடத்தின னடந்தில வதுவுங்

     கடிய காலினாற் றிடத்துடன் குதித்தது கண்டான்.

172

     (இ-ள்) அன்றியும், யானும் சூரியனுதயமாவதற்கு முன்னர் எனது நகரத்திற்குச் செல்லுவேனென்று சொல்லி வேகமாய் நீண்ட கால்களின் கட்டை யவிழ்ப்பதற்கு முன் நீட்சியைக் கொண்ட குதிரையின் மேலேறி அதைப் பலதடவை யடித்து முன்னாற் செலுத்தினன். அக் குதிரையுஞ் சென்றிலது கடுமையான காற்களால் வலிமையோடும் பாய்ந்தது. அதைப் பார்த்தான்.

 

4611. பதறி யேறினன் கண்டனன் பின்னர்விண் பாயுங்

     குதிரை யின்பதத் தளைவிடுத் தேகினன் குழாத்தோ

     டிதென பாவமென் றேகமற் றவருமி தெல்லா

     மதியி னாலறிந் திவருமா னபியிடம் வந்தார்.

173