பக்கம் எண் :

சீறாப்புராணம்

171


முதற்பாகம்
 

(இ-ள்) அன்னையே! அழகிய இளம் பருவத்தையுடைய சிங்கமென்று சொல்லும்படி வலிமை தங்கிய அப்துல்லாவும் பூட்டிய வில்லினால் வெற்றியைப் பொருத்தா நிற்கும் கையினையுடைய லமுறத்தென்று சொல்லும் எனது தோளினது துணையைக் கொண்ட தனையரையும் எங்கே? சொல்லுங்களென்று கேட்ட பின்னர் ஹலிமாவென்னும் மயிலானவர்கள் மறுத்துச் சொல்லுவார்கள்.

 

394. பிள்ளைமென் கனியே செல்வம் பெறுந்தவப் பலனே யெந்த

    முள்ளகத் துயிரே மாமை யோங்கிய முகம்ம தேயிந்

    நள்ளிருட் பொழுது நீங்கி விடிந்தபின் னம்பி மார்க

    டுள்ளுமென் மறிகண் மேய்ப்பத் தொடர்ந்தனர் காட்டிலென்றாள்.

4

     (இ-ள்) மதலையாகிய மென்மை பொருந்திய கனியானவரே! செல்வத்தையடையா நிற்கும் தவப்பலனானவரே! எங்களது இருதய வீட்டி லுறைந்திருக்கும் உயிரானவரே! அழகானது ஓங்கப்பெற்ற முகம்மதானவரே! இந்த நெருங்கிய அருளையுடைய இராக்காலம் போய் நேரம் விடிந்த பிறகு புருடரிற் சிறந்தோரான அவ்விருவர்களும் துள்ளுகின்ற பசிய ஆடுகளை மேய்க்கும்படி அவற்றின்பின் தொடர்ந்து காட்டிற்குச் சென்றிருக்கின்றார்களென்று சொன்னார்கள்.

 

395. கானகத் தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாமென்

    றானவ ளுரைப்ப நவ்வி யகுமதுங் கருத்தி லுற்றுத்

    தூநகைத் தரளச் செவ்வாய்த் துடியிடைக் கொடியை நோக்கி

    யானுமவ் வழிசெல் வேனென் றடுத்தடுத் துரைப்ப தானார்.

5

     (இ-ள்) அந்த ஹலிமா அவர்கள் அவ்விதம் தமையன்மாரான் அவ்விருவர்களும் காட்டினிடமாக ஆடுகளின்பின் கலந்து சென்றார்களென்று சொல்ல அழகிய அஹமதென்னும் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் அச்சமாச்சாரத்தைக் கருத்திற் பொருந்திப் பரிசுத்தமான பற்களாகிய முத்துக்களையுடைய சிவந்த வாயையும் உடுக்கைபோன்ற இடையினைமுடைய கொடியாகிய ஹலிமா அவர்களைப் பார்த்து ‘யானும் ஆடுகளை மேய்த்தலின் பொருட்டு அப்பாதையின்கண் போகுவேனென்று, அடுத்தடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

396. வரமுறு முகம்ம திந்த வாசக முரைப்பத் தேன்பாய்

    விரைமலர் செருகுங் கூந்தன் மென்கொடி யலிமா கேட்டுக்

    கரையிலா வுவகை பொங்கிக் காளைதன் வதன நோக்கி

    நிரைதரு தகர்ப்பின் னாளைச் செல்கென நிகழ்த்தி னாளே.

6