பக்கம் எண் :

சீறாப்புராணம்

172


முதற்பாகம்
 

(இ-ள்) ஆசீர்வாதத்தை யுடைய நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இந்த வாசகத்தைச் சொல்லத் தேனானது ஒழுகுகின்ற வாசனை பொருந்திய புஷ்பங்களைச் சொருகுங் கூந்தலை யுடைய மெல்லிய கொடி போல்வார்களாகிய ஹலிமா அவர்கள் தங்களது காதுகளினாற் கேள்வியுற்று எல்லையில்லாத மகிழ்ச்சியானது அதிகரித்து இளம் பருவத்தை யுடையவர்களான அந்நபிநாயக மவர்களின் முகத்தைப் பார்த்து நீவிர் ஒழுங்கைக் கொண்ட ஆடுகளின் பின்னர் நாளையத் தினம் அவ்விடம் போகுமென்று சொன்னார்கள்.

 

397. விரிகதிர்ப் பருதி வெய்யோ னுதித்தபின் விளங்குஞ் செவ்வித்

    துரைமுகம் மதுக்கு வெள்ளைத் துகிலெடுத் தரையிற் சாத்திச்

    சிரசினி னெய்யுந் தேய்த்துச் செறிமணிக் கோல்கைக் கீய்ந்துக்

    குரிசிலைக் குறித்துச் சூழ்ந்த குமரரை விளித்துச் சொல்வாள்.

7

     (இ-ள்) அவ்வாறு விடை சொன்ன ஹலிமா அவர்கள் விரிந்த கிரணங்கள் தாங்கிய வட்டவடிவையுடைய சூரியன் உதயமான பின்னர் அழகிய அதிகாரத்துவத்தினது நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்கு வெள்ளை நிறத்தை யுடைய வஸ்திரத்தை எடுத்து அரையின் கண்ணுடுத்தி சிரசில் நெய்யுந் தேய்த்து இரத்தின வர்க்கங்கள் செறிந்த ஒரு கோலை யெடுத்து கையில் கொடுத்துப் பெருமையிற் சிறந்தவர்களான அந்நபிநாயகமவர்களைக் குறித்து அங்கு சூழ்ந்த புதல்வர்களைக் கூப்பிட்டுச் சொல்லுவார்கள்.

 

398. கற்செறி பொதும்பிற் கூர்ந்த கண்டக வனத்திற் சேர்ந்த

    புற்செறி வில்லாப் பாரிற் பொறியரா வுறையங் கானில்

    விற்செறி வேனற் காட்டில் விரிநிழ லில்லாச் சார்பின்

    மற்செறி புயத்தீர் சேறன் மறுமென மறுத்துஞ் சொல்வாள்.

8

     (இ-ள்) வலிமையானது நெருங்கிய புயங்களையுடைய சிறுவர்களே! நீங்கள் கற்கள் மிகுத்த மரச்செறிவுகளிலும், கூர்மை தங்கிய முட்களையுடைய வனங்களிலும், பொருந்திய புற்களினது நெருக்கமில்லாத பாறைகளிலும், புள்ளிகள் படர்ந்த சர்ப்பங்கள் வாசஞ் செய்யும் கானகங்களிலும், பிரகாசம் பொருந்திய வேனலையுடைய காடுகளிலும், விரிந்த மரங்களினது நிழல்களில்லாத சார்புகளிலும், செல்லுவதை நிறுத்தி விடுங்களென்று சொல்லிப் பின்னுஞ் சொல்லுவார்கள்.

 

399. பணர்விரி நிழலுந் துய்ய பசும்புலி னிடமும் வாய்ந்த

    மணம்விரி வனசம் பூத்த மடுவுறை யிடமு மார்க்கு

    முணவுறை கனியுஞ் சேர்ந்த வொருங்கினி லாடு மேய்ப்பக்

    குணவரை யனைய செவ்விக் குருசிலைக் கொடுபோ மென்றார்.

9