பக்கம் எண் :

சீறாப்புராணம்

189


முதற்பாகம்
 

(இ-ள்) அன்றியும், கள்ளானது பரவா நிற்கும் பூவினிதழ் போலும் பிரகாசிக்கின்ற விரல்களைக் கொண்ட பாதங்களையுடைய அலிமா அவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் ஆடுகளை மேய்க்கும்படியாகப் பிள்ளைகளோடும் காட்டின்கண்போக அங்கு நடைபெற்ற காரணங்களையும், ஹபஷா நாட்டின் கண்ணிருந்து வந்துற்ற நசுறானிகள் தங்களிடம் வந்துகேட்ட காரியங்களையும், மனத்தினுள் நினைத்து இனி நபிகணாயகமவர்களை அவர்களின் தாயார் ஆமினா அவர்களிடத்தில் கூட்டிக்கொண்டு போய்ச் சேர்ப்பதே புத்தியென்று மனசில் குறிப்பிட்டார்கள்.

 

446. வருட மைந்துமோர் திங்களுஞ் சென்றது மக்கா

    புரம டைந்தியா முகம்மதைப் புகழொடும் பொருவில்

    அரிவை யாமினா வகத்திடைப் புகுத்தலே யறிவென்

    றுரைத ரத்திற லாரிது மனங்களித் துவந்தான்.

56

     (இ-ள்) அவ்விதம் குறிப்பிட்ட ஹலிமா அவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்கு ஐந்து வயதும் ஒரு மாதமுங் கழிந்தன. இனி நாம் திருமக்கமா நகரத்தையடைந்து ஒப்பில்லாத அரிவையாகிய ஆமினா அவர்களின் வீட்டினுள் கீர்த்தியுடன் அந்நபிகள் பெருமானைச் சேர்ப்பதே புத்தியென்று சொல்ல, அதற்கு வலிமையுடைய ஆரிதவர்களும் மனச்சந்தோஷங் கொண்டு பிரியப்பட்டார்கள்.

 

447. மாத வமுகம் மதும்வரி விழியலி மாவுங்

    கோத றுந்துணை வரும்விழித் துணையுடன் கூடித்

    தீது றுங்கொடும் பாலையுங் குறிஞ்சியுஞ் சேர்ந்த

    பாதை யின்றரு நிழலிளைப் பாறினர் பரிவாய். 

57

     (இ-ள்) அப்போது மகாதவத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் இரேகைகள் படர்ந்த கண்களையுடைய ஹலிமா அவர்களும் அவர்களின் குற்றமற்ற நாயகரான ஆரிதவர்களும் மற்றும் ஆங்குண்டாகிய வழித்துணைவர்களோடும் சேர்ந்து புறப்பட்டு தீமை பொருந்திய கொடிய பாலைநிலமும் குறிஞ்சி நிலமும் கூடிய அந்த மக்கமா நகரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு தரு நிழலின்கண் ணிறங்கிச் சுகமாய் இளைப்பாறினார்கள்.

 

448. இறங்கி யங்கிருந் தெழுந்திட நினைக்குமந் நேரம்

    பிறங்கு மோர்கர நீடரக் கண்டனன் பெரிதா

    யறங்கி டந்தொளிர் முகம்மதைக் காண்கில ளலிமா

    மறங்கி டந்தவேற் கட்கடன் மடைதிறந் தனவே.

58