பக்கம் எண் :

சீறாப்புராணம்

188


முதற்பாகம்
 

வளர்ப்பதற்குப் பொருந்தி யிருக்கின்றோம். ஆதலால் அப்பிள்ளையை எங்கள்பால் நீங்கள் தருவீர்களேயானால் நாங்கள் உங்களுக்குச் செல்வமும் பெருமையும் அதிகரிக்கின்ற மிகுதியான திரவியங்களைத் தருகிறோமென்று சொன்னார்கள்.

 

443. நன்று நும்மனத் தெண்ணிய வுவகையா னடுக்க

    மின்றிக் கேட்பதெக் குழந்தைநீ ரியம்புமென் றிசைத்தாள்

    வென்றி மற்புயன் முகம்மது வெனப்பெயர் விரித்தார்

    குன்று போன்முலை செவிசுட மனங்கொதித் திடவே.

53

      (இ-ள்) அதைக்கேட்ட ஹலிமா அவர்கள் அந்த நசுறானிகளிடத்தில் நல்லது, உங்கள் மனசின்கண் நினைத்த விருப்பத்தினால் பயமில்லாது நீங்கள் என்னிடத்தில் கேட்பது எந்தப் பிள்ளை? அதை நீங்கள் எனக்குச் சொல்லுங்களென்று கேட்டார்கள். அப்போது அவர்கள் மலைபோலு முலைகளையுடைய ஹலிமா அவர்களின் காதுகளானவை சுடும்படியாகவும், மனங்கொதித்திடும்படியாகவும், வெற்றி தங்கிய வலிமை கொண்ட புயங்களையுடைய முகம்மதுவென்று பெயர் விரித்துச் சொன்னார்கள்.

 

444. புகன்ற புன்மொழி போதுநும் பதிபுகப் போது

    மிகழ்ந்தி ருந்திராற் பழிவரு மூரிலெம் மினத்தார்

    திகழ்ந்தி ருப்பவ ரறிகிலர் கேட்கிலோ செகுப்ப

    ரகந்த னைப்புற மிடுஞ்செலும் போமென வறைந்தாள்.

54

     (இ-ள்) ஹலிமா அவர்கள் அவ்விதம் சொல்லிய அந்த நசுறானிகளைப் பார்த்து, நீங்கள் சொல்லிய இழிவான வார்த்தைகள் சொன்னமட்டும் போதும். உங்களது ஊராகிய ஹபசி நகரத்தை யடையும்படி போய்விடுங்கள். அப்படிப் போகாது இவ் வார்த்தையை நிந்தனை செய்துவிட்டு நீங்கள் இவ்வூரில் இருப்பீர்களேயானால் கொலை பாதகம் வந்து சம்பவிக்கும். அன்றியும் விளக்கமுற்று இவ்வூரில் இருப்பவர்களான எனது பந்து ஜனங்கள் இச்சமாச்சாரத்தை யறியார்கள். ஒருவேளை அவர்கள் காதுகளினால் கேள்விப்பட்டு அறிவார்களேயானால் உங்களைக் கொலை செய்வார்கள். ஆதலால் உங்களது மனசின்கண் எண்ணிய எண்ணத்தைப் பின்னிடுங்கள். இப்பொழுதே இவ்விடத்தை விட்டும் எழும்பிப் போகுங்கள் போகுங்களென்று கோபமாகச் சொன்னார்கள்.

 

445. காட்டி னிற்புக விளைந்தகா ரணத்தையு மபசா

    நாட்டி லுற்றவர் கேட்டகா ரியங்களு நறவூ

    ரேட்டி லங்கிதழ்ப் பதத்தலி மாமனத் தெண்ணிக்

    கூட்டித் தாயிடஞ் சேர்ப்பதே கருத்தெனக் குறித்தாள்.

55