முதற்பாகம்
கடவுள் வாழ்த்துப் படலம்
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய
விருத்தம்
1.
திருவினுந்
திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினுந்
தெளிவதாய்ச் சிறந்த
மருவினு
மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப்
பேரொளி யனைத்தும்
பொருவினும்
பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத்
துறைந்த பல் லுயிரின்
கருவினுங்
கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப்
பொருத்துதல் கருத்தே.
1
பதவுரை
திருவினும் திரு ஆய் - மேன்மையிலும் மேன்மையாய்,
பொருளினும் பொருள் ஆய் - உண்மையிலு முண்மையாய், தெளிவினும் தெளிவு அது ஆய் - அறிவிலும் அறிவாய்,
சிறந்த - சிறப்பினையுடைய, மருவினும் மரு ஆய் - பரிமளத்திலும் பரிமளமாய், அணுவுக்கும் அணு ஆய்
- பரமாணுவுக்கும் பரமாணுவாய், மதித்திடா - கணிக்கக் கூடாத, பேர் ஒளி அனைத்தும் - பெரிய பிரகாச
முழுவதும், பொருவினும் பொரு ஆ - ஒப்பிலும் ஒப்பாய், வடிவினும் வடிவு ஆய் - உருவிலும் உருவாய்,
பூதலத்து உறைந்த- பூமியி னிடத்துத் தங்கிய, உயிரின் - பல ஜீவராசிகளின், கருவினும் கரு ஆய்
- கருவிலுங் கருவாய், பெரும் தலம் புரந்த - பெரிய உலகத்தை ஆட்சி செய்கின்ற, கருத்தனை - கர்த்தா
வாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை, பொருத்துதல் - இருதயத்தின்கண் பொருந்தச் செய்வது,
கருத்து - கருத்தாகும்.
பொழிப்புரை
மேன்மையிலும், மேன்மையாய், உண்மையிலுமுண்மையாய்,
அறிவிலும் அறிவாய்ச், சிறப்பினை யுடைய பரிமளத்திலும் பரிமளமாய்ப், பரமாணுவுக்கும் பரமாணுவாய்க்,
கணிக்கக் கூடாத பெரிய பிரகாச முழுவதும் ஒப்பிலும் ஒப்பாய் உருவிலும் உருவாய்ப் பூமியினிடத்துத்
தங்கியபல ஜீவ ராசிகளின் கருவிலுங் கருவாய்ப் பெரிய உலகத்தை ஆட்சி செய்கின்ற கர்த்தாவாகிய
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை இருதயத்தின்கண் பொருந்தச் செய்வது கருத்தாகும்.
|