பக்கம் எண் :

சீறாப்புராணம்

307


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வித மகிழ்ச்சியடைந்த வண்டுகள் இருந்து தேனானது பக்கங்களில் தவழாநிற்கும் புஷ்பமாலையணிந்த புயங்களையுடைய மன்னவரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அச்சர்ப்பத்தை நோக்கி நீ மலைகளினிடத்திலும் காடுகளினிடத்திலும் நுழைந்து பிரியத்துடன் வாசஞ் செய்வதேயல்லாமல் இம்மாதிரிப் பாதைகளிற் பொருந்தியிருப்பாயானால் உனதுபால் ஆபத்துகள் வந்து சம்பவிக்குமென்று எடுத்துச் சொன்னார்கள்.

 

784. ஒடுங்கித் தெண்டனிட் டுறைந்திட மிகழ்ந்தொரு மருங்கி

    னெடுங்கி ரிப்புறந் தவழ்ந்தென வுடறனை நெளித்து

    மடங்கல் வெங்கரி கொடுவரி யடவியின் மறைந்து

    நடுங்கி டத்தனி போயது பெருந்தலை நாகம்.

17

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் சொல்லப் பெரிய தலையையுடைய அந்தச் சர்ப்பமானது ஒடுக்கமுற்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை வணங்கித் தான் வாசஞ்செய்த அவ்விடத்தை விட்டும் நடந்து வேறே ஒரு பக்கத்தில் நெடிய மலையானது வெளியிலே தவழ்ந்ததைப் போலப் பார்த்தவர்கள் நடுக்கமுறும்படித் தனது சரீரத்தை நெளித்துக் கொடிய சிங்கம், யானை, வேங்கை, முதலிய மிருகங்கள் வாசஞ்செய்யாநின்ற காட்டின்கண் ஏகமாய்த் தவழ்ந்து போயிற்று.

 

785. நாக முற்றதுங் கிடந்ததும் பாதையி னயினார்

    பாக முற்றுமெய் வணங்கிநன் மொழிசில பகர்ந்து

    போகை யென்றதிற் போயதும் புதுமைகொ லெனவே

    யாக முற்றதி சயித்தன ரனைவரு மன்றே.

18

     (இ-ள்) அப்போது அங்குற்ற வியாபாரிகளனைவரும் சர்ப்பமானது பாதையிற் பொருந்தியதும் கிடந்ததும் நமது நயினாரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் பக்கத்தி லடைந்து தனது சரீரத்தினாற் பணிந்து நன்மைதங்கிய சிலவார்த்தைகளைச் சொல்லிப் போவாயாகவென்று சொன்னதினால் அவ்விடத்தை விட்டும் போயதும் அற்புதந்தானென்று மனசிற்கொண்டு ஆச்சரியப்பட்டார்கள்.