பக்கம் எண் :

சீறாப்புராணம்

39


முதற்பாகம்
 

67. வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத்

   தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ்

   சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த

   கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும்.

47

      (இ-ள்) அன்றியும், சிறந்த மெல்லிய ஆபரணங்களையுடைய மாதர்கள் தங்களின் சரீரமானது வருந்தும் வண்ணம் வாவிகளில் தோயப் பெற்று நீர் குடைந்து விளையாடுவோர்களின் சந்திரனைப் போன்ற முகத்தினது தோற்றமானது, சிவந்த தாமரை மலரும் குவளைப் புஷ்பமுமென்று சொல்லும்படி அழகானது சிறக்கப்பெற்றது, கூந்தல் வெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்தினிடத்து மேகத்தை நிகர்த்துப் பிரகாசித்தது.

 

68. திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச்

   சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில்

   விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்

   பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும்.

48

      (இ-ள்) அன்றியும், செவ்வைப் பட்ட மெல்லிய ஆபரணங்களையுடைய மாதர்கள் நீரின்கண் ஸ்நானஞ் செய்ய அவர்களின் கருமை பெற்ற கூந்தலினிடத் திருந்த வண்டுகள் எழும்பிப் புஷ்பங்களையுடைய அத்தடாகத்தில் மலர்ந்த குவளை மலர்களில் விழுவது, மின்னலை யொத்தவர்களான இந்தப் பெண்களின் கண்களுக்கு நீங்கள் நிகராகுவீரோ வென்று சொல்லிக் கோபத்துடன் தங்களின் கால்களினால் உதைப்பதைப் பொருவா நிற்கும்.

 

69. மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை

   யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப்

   பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச்

   செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள்.

49

      (இ-ள்) அன்றியும், ஒரு மாதானவள் மறிந்து தூங்கப் பெற்ற நாக மரத்தினது பழத்தை வீசி விட்டுப் பூமியின்கண் கிடந்த வண்டை அந்நாகப் பழமென்று கையினாலெடுக்க அஃது கையை விட்டும் பறிந்து போனதினால் அச்சத்தோடும் கையை யுதறித் திடுக்கிட்டு சூழும்படி நெருக்கமுற்றுச் சிந்திய கரிய நிறத்தையுடைய மற்ற அந்தப் பழங்களையுந் தொடாள்.

 

70. கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற்

   சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின்

   விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து

   பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும்.

50