பக்கம் எண் :

சீறாப்புராணம்

400


முதற்பாகம்
 

1036. அகிலமுஞ் சுவன நாடு மமரரும் போற்றி வாழ்த்த

     மிகுபுகழ் குவைலி தீன்ற மெல்லியல் களிப்புப் பொங்க

     நகிலணி துகிர்க்கொம் பென்ன நாரியர் புளகம் பூப்ப

     முகம்மது வென்னும் வள்ளன் மக்கமா நகரின் வந்தார்.

3

     (இ-ள்) அவ்விதம் வந்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும் வள்ளலானவர்கள் பூலோகமும் சுவர்க்கலோகமும் தேவர்களான மலாயிக்கத்து மார்களும் புகழ்ந்து ஆசீர்வதிக்கவும், மிகுந்த கீர்த்தியினைக் கொண்ட குவைலீதென்பவர் பெற்ற மெல்லிய நடையினையுடைய கதீஜாநாயகமவர்கள் மனதில் மகிழ்ச்சியதிகரிக்கவும், முலைப்பாரமமைந்த அழகிய பவளக்கொடி போலும் மற்றும் பெண்கள் தங்களின் சரீரத்தில் புளகம் பூக்கவும், மக்கமா நகரத்தின் கண் வந்து சேர்ந்தார்கள்.

 

1037. காரணக் கடலை யொண்கேழ்க் கதிருமிழ் மலையை யாதி

     யாரணக் குரிசி லென்னு மகுமதை யெதிரிற் புக்கித்

     தாரணிந் திலகு தோட்பூ தரத்தபூத் தாலிப் வெற்றி

     வீரமுந் திறலும் வாய்ந்த மென்கரத் தணைத்து மோந்தார்.

4

     (இ-ள்) அவ்வாறு வந்து சேரவே புஷ்பமாலைகள் அணிந்து பிரகாசியா நிற்கும் புயங்களாகிய மலைகளையுடைய அபீத்தாலிபவர்கள் காரணத்தினது சமுத்திர மானவர்களை, ஒள்ளிய பிரபையினையுடைய கிரணங்களைக் கக்காநின்ற இறும்பூ தானவர்களை, ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் வேதத்தினையுடைய பெருமையிற் சிறந்தோரெனும் அஹ்மதென்ற திருநாமத்தைக் கொண்ட நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை, எதிரிற்போய்ச் சேர்ந்து வெற்றியினது வீரத்தையும் வலிமையையும் சிறக்கப் பெற்ற தங்களின் மெல்லிய இரண்டு கைகளினாலும் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

 

1038. அணியிழை சுமந்த செவ்வி யனையெனும் பாத்தி மாவந்

     திணைவிழி பெற்றே னென்ன விருகையாற் றழுவிப் பைம்பொன்

     மணமலி பீடத் தேற்றி முகம்மதை யினிது போற்றிக்

     கணநிரை யயினி நீராற் கண்ணெச்சிற் கழுவி னாரால்.

5

     (இ-ள்) அன்றியும், அலங்காரமான ஆபரணங்களைத் தாங்கிய அழகிய அன்னையென்று சொல்லும் அபீத்தாலிபவர்களின் மனைவியாரான பாத்திமா அவர்கள் வந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை எனது இரு கண்களையும் பெற்றேனென்று சொல்லி இரண்டு கைகளினாலும் கட்டி யணைத்துப் பசிய பொன்னினாற் செய்த பரிமளமிகுந்த