பக்கம் எண் :

சீறாப்புராணம்

407


முதற்பாகம்
 

மனைத்திலும் வானலோக மனைத்திலும் வாசனையானது பரிமளித்திடுவதைப் பார்த்து வண்டுகள் தங்காநின்ற மலர்மாலையணிந்த கூந்தலையுடைய பெண்களும் செல்வத்தையுடைய ஆடவர்களும் அதிகமாகத் துதிக்கும் வண்ணம் அழகிய கருங்குவளைப் புஷ்பத்தையுந் தமக்கிணையில்லை யென்று தாண்டிய கண்களையுடையவர்களான அக்கதீஜாநாயக மவர்கள் நன்மை பொருந்திய ஒரு சொப்பனத்தைக் கண்டார்கள்.

 

1056. மெல்லியல் கனவு கண்டு விழித்தெழுந் திருந்து நெஞ்சைக்

     கல்லிய துயரி னோடுங் கருத்தொடுந் தெளிந்து பார்த்து

     வல்லவ னுறக்கத் தென்னு மறைவலான் றன்னைக் கூவி

     யல்லினிற் றெரியக் கண்ட காட்சியை யடுத்து ரைத்தார்.

23

     (இ-ள்) அவ்விதம் மெல்லிய நடையினை யுடையவர்களாகிய கதீஜா நாயகமவர்கள் ஒரு சொப்பனத்தைப் பார்த்து இருகண்களையும் விழித்து எழும்பி இருந்து அதைத் தங்களின் மனதைத் தோண்டிய துன்பத்துடனுங் கருத்துடனும் தேர்ந்து பார்த்துச் சமர்த்தனான உறக்கத்தென்று சொல்லும் வேதவல்லவனை அழைத்து அவனை நெருங்கி அவனுக்கு இராப் பொழுதில் தாங்கள் அறியும்படி பார்த்த அச்சொப்பனத்தினது தோற்றத்தைச் சொன்னார்கள்.

 

1057. மடந்தைதன் கனவைக் கேட்டு மனத்தினுட் படுத்தித் தேர்ந்து

     கடந்தநூன் முறையி னாலுங் கல்வியோர் கேள்வி யாலும்

     படர்ந்ததன் னறிவி னாலும் பகுத்துச்சீர் தூக்கிப் பார்த்துத்

     தொடர்ந்தபுன் முறவ றோன்றத் தோகையர்க் குரைப்ப தானான்.

24

     (இ-ள்) அப்போது உறக்கத்தென்பவன் மடந்தையாகிய கதீஜா நாயகமவர்களினது சொப்பனத்தைத் தனது இரு காதுகளினாலுங் கேள்வியுற்று அதை இருதயத்தினகம் பொருத்தித் தெளிந்து அளவைக் கடந்த நூற்களினது முறைமையினாலும் அறிவுடையார்களின் கேள்வியினாலும் விரிந்த தனது புத்தியினாலும் பிரித்து ஆராய்ந்து பார்த்து தொடரப்பெற்ற வெள்ளிய தனது புன்சிரிப்பானது வெளியில் தெரியும் வண்ணம் தோகையராகிய அக் கதீஜாநாயக மவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.

 

1058. இருநிலத் துறைந்த வேரீ மானிலை யெழுந்து நின்ற

     தருமுகம் மதுநல் வாசந் தழைத்தல்தீன் விளக்க மின்பம்

     வருகனி கலிமா வாழ்த்து வானவர் செயல்பூ மாரி

     தெரிதரச் சொரித னின்னைத் திருமண முடித்த லென்றான்.

25