பக்கம் எண் :

சீறாப்புராணம்

408


முதற்பாகம்
 

      (இ-ள்) பெரிய இந்தப் பூமியின்கண் தங்கிய வேரானது ஈமானிலை, எழும்பி நின்ற மரம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள், நல்ல பரிமளம் ஓங்குதல் தீனுல்லிஸ்லா மென்னும் மார்க்கத்தினது விளக்கம் இனிமையானது உதயமாகிய பழம் கலிமா வாழ்த்துதல் தேவர்களான மலாஇக்கத்து மார்களின் செயல் அறியும் வண்ணம் புஷ்பமழை சிந்துதல் தங்களை அந்நபிகள் பெருமானவர்கள் அழகிய விவாக முடித்துக் கொள்ளுவதென்று சொன்னான்.

 

1059. புதியதோர் கனவி னுட்பப் பொருளினைத் தேர்ந்து சோதி

     மதிநுதற் குரைத்துப் போற்றி மனமகிழ்ந் தெழுந்து வீரங்

     குதிகொளும் வெள்வேற் செங்கைக் குவைலிது மருங்கிற் புக்கித்

     துதிசெய்தங் குற்ற செய்தி யனைத்தையுந் தொகுத்துச் சொன்னான்.

26

     (இ-ள்) அவ்வாறு அவ்வுறக்கத் தென்பவன் நூதனமாகிய ஒப்பற்ற சொப்பனத்தின் அந்தரங் கார்த்தத்தைத் தனது மனசின் கண் தெளிந்து பிரகாசத்தைக் கொண்ட இளஞ் சந்திரன் போலும் நெற்றியினையுடையவர்களாகிய அக்கதீஜா நாயக மவர்களுக்குச் சொல்லி அவர்களைத் துதித்து மனமகிழ்ச்சி கொண்டெழும்பி வலிமை யதிகரியா நிற்கும் வெள்ளிய வேலாயுதந் தாங்கிய சிவந்த கையினையுடைய குவைலிதென்பவனின் பக்கத்திற் போய்ச் சேர்ந்து அவனைப் புகழ்ந்து கதீஜாநாயகமவர்களி ருக்குமிடத்தில் பொருந்திய சமாச்சாரங்களெல்லாவற்றையும் ஒழுங்காகச் சொன்னான்.

 

1060. அவிரொளி விரிக்கு மேனி யகுமதின் மனைவி யாகப்

     புவியினும் வானும் போற்றப் பொருந்தனும் பொன்னே யென்னக்

     குவைலிது கேட்டா நந்தக் கொழுங்கடற் குளித்துக் கூர்ந்து

     தவமுய ரறிவ னோடுஞ் சம்மதித் திருந்தா னன்றே.

27

     (இ-ள்) அன்றியும், ஒளிரா நிற்கும் பிரகாசத்தை எவ்விடங்களிலும் விரியும்படி செய்யும் திருமேனியையுடைய அஹ்மதென்னும் அபிதானத்தைக் கொண்ட நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மனையாளாகவும் இந்தப் பூலோகத்திலும் வானலோகத்திலும் போற்றவும் பொருந்துதல் தங்களினது இலக்குமியாகிய கதீஜா நாயகந்தானென்று சொல்ல; அதைக் குவைலிதென்பவன் தனது இருகாதுகளினாலுங் கேள்வியுற்றுச் செழிய சந்தோஷ சாகரத்தில் மூழ்கித் தவமோங்கா நின்ற தனது புத்தியோடும் அவ்விவாகத்திற்கு உடன் பட்டிருந்தான்.