முதற்பாகம்
(இ-ள்)
பெருமை தங்கிய ஹாஷிம் குலத்தினது அப்துல்லா வென்பவரின் புதல்வரான அழகிய கஸ்தூரியினது பரிமளத்தைக்
கொண்ட சரீரத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பெறாநிற்கும் புதிய விவாகத்தினது
கோலமானது வருகின்ற குற்றமற்ற திங்கட் கிழமையி னிரவென்று யாவர்களுக்கும் எடுத்துக்காட்டி அன்புற்றவர்களுக்கு
இன்னம் சொல்லுவ துண்டுமென்று சொல்லுவான்.
1100.
நறைகொள்
வாயிலின் மகரதோ ரணங்களை நடுமி
னிறையு மாடங்கள்
புதுக்குமின் கொடிநிரைத் திடுமி
னுறையும் வெண்சுதை
மதிடொறுங் கரைத்தொழுக் கிடுமின்
குறைவி லாகபொற்
பூரண குடங்கள்வைத் திடுமின்.
4
(இ-ள்) மகர தோரணங்களைப் பரிமளத்தைக்
கொண்ட வாசலின்கண் நாட்டுங்கள். பலவித செல்வங்களினாலும் பூரணப்பட்ட மாடங்களைச் செவ்வைப்
படுத்துங்கள். கொடிகளை வரிசையாகக் கட்டுங்கள். சுவர்கள் தோறும் உறையா நிற்கும் வெண்ணிறத்தையுடைய
சுண்ணச் சாந்தினைக் கரைத்துத் துளித்திடுங்கள். குறைவில்லாத பொன்னினாலான பூரணக் கும்பங்களை
வைத்திடுங்கள்.
1101.
பூணு நல்லிழை
பூணுமின் குழற்ககிற் புகைமின்
காணொ ணாவிடைக்
கம்பொன்மே கலைகவின் புனைமின்
பாணி யிற்சரி தோளணி
பலபரித் திடுமின்
வாணு தற்கணி
கடுவரி விழிக்குமை வரைமின்.
5
(இ-ள்)
சரீரத்தின்கண் அணியா நிற்கும் நல்ல ஆபரணங்களை அணியுங்கள். கூந்தலுக்கு அகிற்கட்டையினது
தூமத்தைப் புகைத்திடுங்கள். கண்ணினாற் காணுதற்கரிதான இடையினுக்கு அழகிய பொன்னாலாகிய சிறந்த
மேகலாபரணத்தைத் தரியுங்கள். கைகளிற் சரியா நின்ற பலவிதத் தோளினது கலங்களைப் பூணுங்கள்.
ஒள்ளிய பிரகாசத்தையுடைய நெற்றிக்குப் பொட்டும் விடத்தைப் போலும் செவ்வரி பரந்த கண்களுக்கு
மையும் எழுதுங்கள்.
1102.
இரவ லர்க்கினி
தருளொடு மின்னமு திடுமின்
வரைவி லாதெடுத்
தேற்பவர்க் கணிவழங் கிடுமி
னிருமை யும்பலன்
பெறுமினென் றினையன வியம்பி
யரவ மீக்கொளக்
குணிலெடுத் தணிமுர சறைந்தான்.
6
(இ-ள்) யாவர்களுக்கு இனிய கிருபையோடும்
இன்பமான அன்னத்தையிடுங்கள். இரப்பவர்களுக்கு ஆடையாபரண முதலியவற்றை வரைவில்லாது எடுத்து வழங்குங்கள்.
|