பக்கம் எண் :

சீறாப்புராணம்

456


முதற்பாகம்
 

1190. கால மேகக் கவிகையி னீழலோ

     நீல மோநறை நானநி றைத்ததோ

     கோல வார்குவ வுப்புயக் குங்கும

     மாலை யூடுறை வண்டின மோவென்பார்

94

      (இ-ள்) அன்றியும், சில பெண்கள் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் புயங்களில் தோற்றும் பிரகாசமானது, ஒளிராநிற்கும் அவர்களின் அழகிய மேகக் குடையினது நிழலோ? அல்லது நீலரத்தினமோ? பரிமளத்தைக் கொண்ட கஸ்தூரியை நிறையச் செய்ததோ? சிறப்பையுடைய உயர்ந்த திரட்சி பொருந்திய தோள்களி லணிந்திருக்கும் குங்குமப் புஷ்பத்தினாலான மாலையின்கண் தங்கா நிற்கும் வண்டினது கூட்டமோ? இவற்றில் யாதென்று கேட்பார்கள்.

 

1191. மண்ணி டந்தெரி வின்றென வந்தடர்

     பெண்ணி னங்கள் பெருத்திடு மாசையாற்

     சுண்ண மும்மல ருந்திகழ் தோண்மிசைக்

     கண்ணின் பேரொளி கான்றது காணென்பார்.

95

      (இ-ள்) அதைக் கேட்ட மற்றவர்கள் பூமியின் இடமானது கண்களுக்குத் தோற்றவில்லையென்று சொல்லும் வண்ணம் வந்து நெருங்கிய பெண்களினது கூட்டங்கள் தங்களின் மனசின்கண் அதிகரியா நிற்கும் ஆசையினால் மகரந்தப் பொடிகளும் மலர்மாலைகளும் ஒளிரா நிற்கும் அந்நபிகள் பெருமான் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது புயங்களின்மீது பார்க்கின்ற கண்களின் பெரிய பிரபையானது பிரகாசிக்கின்றதென்று சொல்லுவார்கள்.

 

1192. தெளிய வந்துறுஞ் சிந்தையர் சிந்தையி

     னளியெ லாமிகழ்ந் தாசையி னாவலா

     லொளியெ லாமிவ ருள்ளுறை யாலிந்த

     வெளியெ லாமந்த மெய்யுருக் காணென்பார்.

96

      (இ-ள்) அன்றியும், தேர்ச்சியுறும் வண்ணம் வந்து பொருந்திய மனத்தை யுடையவர்களான அந்தப் பெண்கள் தங்கள் மனசின்கண் கொண்டிருந்த ஆசைகள் அனைத்தையும் நிந்தித்து நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் ஆசையினது ஆவலினால் ஒளிகளியாவும் இவர்களின் மனவெண்ண மானதினாலே இந்த வெளிகளெல்லாவற்றிலும் அந்த மெய்ச்சொருபத்தின் தோற்றமென்று சொன்னார்கள்.