பக்கம் எண் :

சீறாப்புராணம்

595


முதற்பாகம்
 

      (இ-ள்) அப்போது ஹப்பாபு றலியல்லாகு அன்கு அவர்களும் மகரந்தங்கள் அவிழா நிற்கும் மலர்மாலை யணிந்த கூந்தலையுடைய தையலான பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களும் சகீது றலியல்லாகு அன்கு அவர்களும் உமறென்பவர் ஓதாநின்ற நல்ல சன்மார்க்கத்திற்கு உடன்பட்டுப் பொருந்தினாரென்று மனசின்கண் நினைத்துத் தங்களின் பயங்கரத்தை யொழித்து வீட்டினகம் ஒளித்ததைத் தவிர்ந்து பொருந்திய திண்ணையின்கண் நுழைந்து மேல் உண்டாகுவதைப் பார்க்கும்படி நின்றார்கள்.

 

1581. மருங்கினி னின்ற கப்பாப் மன்னவ னுமறை நோக்கித்

     தருங்கர தலத்தோய் நும்பாற் சகத்தினும் விண்ணு மொவ்வா

     வருங்கன வெற்றி நன்மா ராயமொன் றடைவ தாக

     நெருங்கிய பொருளா யின்றோர் சோபன நிகழ்வ னென்றார்.

79

      (இ-ள்) அவ்வாறு பக்கத்தில் நின்ற ஹப்பாபு றலியல்லாகு அன்கு அவர்கள் அரசரான உமறுகத்தா பென்பவரைப் பார்த்து யாவர்களுக்கும் அருளா நிற்கும் கைதலத்தையுடையவரே! உம்மிடத்தில் இந்தப் பூமியின் கண்ணும் ஆகாய லோகத்திலும் ஒவ்வாத அரிய மிகுதியான வெற்றியையுடைய நல்ல விசேஷமானது பொருந்தும் வண்ணம் நெருக்கமுற்ற பொருளாக இன்றையதினம் ஒரு சோபனமானது சம்பவிக்குமென்று சொன்னார்கள்.

 

1582. இணையட றவிர்வெள் வேலோ யின்றிர வுமைதீ னுக்கோர்

     துணையென வருள்செய் வாயென் றாதியை துதித்துச் செவ்வி

     மணவலி புயத்தார் வள்ளன் முகம்மதாண் டிரந்து கேட்ப

     வுணர்வுறக் கேட்டே மென்றா ரோங்குநன் னெறியை நீங்கார்.

80

      (இ-ள்) ஓங்கா நிற்கும் நல் சன்மார்க்கத்தை விட்டும் நீங்காதவரான ஹப்பாபு றலியல்லாகு அன்கு அவர்கள் தம்மையொத்த சத்துராதிகளின் வலிமையை யொழிக்கும் வெள்ளிய வேலாயுதத்தையுடைய உமறுகத்தா பானவரே! உம்மை இன்றைய இராவில் கூட்டமுற்ற வலிமையினது அழகிய தோள்களை யுடையவர்களான வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்கு தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு ஒப்பற்ற துணையென்று சொல்லும்படி கிருபை செய்வாயாக வென்று ஆதியாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவைப் புகழ்ந்து இரந்து கேட்கும்படி யாம் அறிவுறும் வண்ணம் எமது காதுகளினால் கேள்வியுற்றோ மென்று சொன்னார்கள்.