பக்கம் எண் :

சீறாப்புராணம்

596


முதற்பாகம்
 

1583. எடுத்திவை யுரைத்த கப்பாப் தனைவிளித் திரப்போர்க் கென்றுங்

      கொடுத்ததிற் சிவந்த செங்கைக் கோளரி யுமறு கத்தாப்

      கடுத்தவழ்ந் திருண்டு சேந்த கயல்விழி கதீசா கேள்வ

      ரடுத்துறைந் தவணெங் கென்ன வணியிதழ் வாய்விண் டாரால்.

81

      (இ-ள்) இச்சமாச்சாரங்களை எடுத்துச் சொன்ன ஹப்பாபு றலியல்லாகு அன்கு அவர்களை யாசிப்பவர்களுக்கெந்நாளும் கொடுத்ததினால் சிவப்படைந்த சிவந்த கைகளை யுடைய ஆண் சிங்கமான உமறுகத்தாபென்பவர் பார்த்து விடமானது தவழப்பெற்றுக் கறுத்துச் சிவப்புற்ற கெண்டை மீன் போலும் கண்களை யுடைய கதீஜா அவர்களின் நாயகராகிய அந்த முகம்மதென்பவர்கள் நெருங்கி யிருக்கின்ற இடமானது எங்கே? என்று தமது அழகிய அதரங்களை யுடைய வாயைத் திறந்து கேட்டார்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் (வேறு)

 

1584. முதிருங் கருஞ்சூற் சலதரத்தை

         முடியிற் றாங்கிச் செழுந்தேனை

     விதிருஞ் சினைத்தண் டலையுடுத்து

         விளங்குங் குவவு சபாவரைக்குச்

     சதுரி னணித்தா யொருமனையுண்

         டதனிற் றரித்தா ரகுமதுவு

     முதிருங் கலிமா நிலைதவறா

         முதியோர் சிலரு முரணறவே.

82

      (இ-ள்) அவ்விதம் கேட்கவே சூலானது முதிரப் பெற்ற கரிய மேகத்தைச் சிகரத்தின்கண் சுமந்து செழிய மதுவை விதிர்க்கா நிற்கும் கிளைகளை யுடைய சோலைகளைச் சூழப்பெற்று விளங்குகின்ற பெருமை தங்கிய சபாமலைக்கு சமீபத்தில் சதுரத்தையுடைய ஓர் வீடுண்டு அவ்வீட்டில் அஹ்ம தென்னும் திருநாமத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் முதிர்ந்த கலிமாவினது நிலைமையில் தவறாத முதியவர்களான சில முஸ்லிம்களும் யாதொரு விரோதமுமில்லாமல் தங்கியிருக்கிறார்களென்று.

 

1585. மறைமா மொழிநா வொழியாது

         வளர்க்கு முதியோ ரினிதுரைப்பக்

     கறையா ரிலைவேற் கரத்தேந்திக்

         கடிதின் விருப்பி னுடனெழுந்து

     குறையா மதிய மெனத்தீனை

         வளர்க்குங் குரிசின் முகம்மதுவு

     முறைவார் பொழில்சூழ் வரையினிடத்

         துற்றா ருமறு கத்தாபே.

83