முதற்பாகம்
மதியையழைப்பித்த
படலம்
அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்.
1751.தவிசினி
லிருந்து வெற்றித் தடமுடி யரசர் கோமா
னபுசகல் தன்னைக் கூவி யணிநகர்க் கழைத்த
மாற்றங்
கவரற மனத்தி னுற்ற கருமங்க ளனைத்து நாளுங்
குபலினை மனத்திற் கொண்டோய் கூறெனக் கூறி
னானால்.
1
(இ-ள்) விஜயத்தைக் கொண்ட பெருமை
பொருந்திய கிரீடத்தையுடைய அரசரேசுவரனான ஹபீபிபுனு
மாலிக்கென்பவன் அவ்வாறு ஓராசனத்தின்கண்
தங்கியிருந்து அபூஜகிலென்பவனைக் கூப்பிட்டுக் குபலென்று
சொல்லும் தம்பிரானைப் பிரதிதினமும் மனத்தின்கண்
கொண்ட அபூஜகிலே, எங்களை அழகிய இந்தத் திருமக்கமா
நகரத்திற்கு விளித்த சமாச்சாரத்தையும் உனது
இருதயத்தின்கண் பொருந்திய எல்லாக் காரியங்களையும்
பிரிவில்லாது என்னோடு சொல்லென்று கேட்டான்.
1752.ஒலீதுத் பாவு
மாறா வுக்குபா வுமையா சைபா
மலிதருங் கொடுமை பூண்ட மனத்தபூ சகுலு
மொன்றாய்
நலிதலி லெழுந்து போற்றி நமர்க்கல ருற்ற
யாவு
மலர்தலை யுலகம் போற்று மரசுகேட் டருள்க
வென்றார்.
2
(இ-ள்) அவ்விதம் கேட்கவே ஒலீது,
உத்துபா, உமாறா, உக்குபா, உமையா, சைபாவாகிய இவர்களும்
மிகுத்த கொடுமையைத் தரித்த மனத்தை யுடைய அபூஜகிலும்
மெலிவில்லாது ஒன்றாயெழும்பித் துதித்து விரிந்த
இடத்தையுடைய இவ்வுலகமானது துதியா நிற்கும்
அரசரானவர்களே, பழிச் சொல்லாய் நம்மவர்களுக்குப்
பொருந்திய அனைத்தையும் கேட்டருளுங்களென்று
சொல்லுவார்கள்.
1753.முகம்மதென்
றொருத்தன் றோன்றி வணக்கமு நெறியு மிந்த
வகலிடந் தோன்றத் தோன்று மாலய முழுது
முன்னோர்
புகலுநன் மறையுஞ் சூழ்ந்த பொருவருங் குலமு மற்று
மிகலொடுங் கெடுத்து நின்றா னிவையிவண்
விளைந்த தையா.
3
|