|
முதற்பாகம்
1796.முரணுறும்
வானர்கோ னொடுமூ வாயிர
வரமுறு மலக்குகள் வந்து தோன்றினர்
சிரமொரு கிரியெனத் திகழச் செவ்விய
கரதலம் புயவரை ககனந் துன்னவே.
46
(இ-ள்) அப்பொழுது வலிமை மிகுத்த
வானவர்களாகிய மலாயிக்கத்துமார்களின் மன்னவரான
ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்களுடன் தலையானது ஒரு மலையைப்
போலப் பிரகாசிக்கவும் அழகிய கைத்தலங்களும்
புயங்களாகிய பர்வதங்களும் ஆகாயத்தில் நெருங்கவுமான
வரத்தினைப் பொருந்திய மூவாயிரம்
மலாயிக்கத்துமார்கள் வந்து அவ்வெள்ளியதானத்தில்
தோற்றமாயினார்கள்.
1797.பெரும்படைப்
பெனுமவர் பிடித்த வல்லய
மரும்பெரும் பொருளவன் முனிவி லாயது
தரும்பெருங் கதிரவன் றனினும் வெய்யதா
யிரும்பெரும் புவிக்கட லேழு முண்ணுமால்.
47
(இ-ள்) பெரும் படைப்பென்று
சொல்லா நிற்கும் அம்மலாயிக்கத்துமார்கள் தங்களின்
கைகளிலே பிடித்திருந்த வல்லையமானது அருமையான
பெருமையையுடைய பொருளாகிய அல்ஹக்கு சுபுகானகுவத்த
ஆலாவின் கோபத்தினாலாயது. அன்றியும், பெரிய
கிரணங்களைத்
தருகின்ற
சூரியனைப் பார்க்கிலும் கொடியதாய் மிகவும் பெரிதான
இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஏழு சமுத்திரங்களையும் அருந்தா
நிற்கும்.
1798.அறத்தனிப் படைப்பவர்
கரத்தி லாயவை
மறத்தினைத் திரட்டியோர் வடிவு கொண்டென
வுறைத்தெழுங் கொழுந்தழ லோங்கி யொவ்வொரு
புறத்தினி லெழுபது தலைக்கும் பொங்குமால்.
48
(இ-ள்) மேலும், ஒப்பற்ற தரும்ப்
படைப்பினரான அம்மலாயிக்கத்துமார்களின் கைகளில்
ஆயவைகள் கொடுமையையே யொன்றாகத் திரளும்படி செய்து அது
ஒரு வடிவத்தைக் கொண்டாற்போல உறைப்புற்றோங்கும்
செழிய அக்கினியானது ஒவ்வொரு பக்கத்தில் எழுபது
தலைக்கும் எழும்பி அதிகரியா நிற்கும்.
1799.வருமெழு வான்படு
வானென் றோங்கிய
விருதிசைக் கிருதலை யிடமுந் தீண்டுந்தீப்
பொருகதி ரயிற்கெதிர் பொருவ வாயிரம்
பருதியுஞ் செழுங்கதிர் பரப்ப வெட்குமால்.
49
|