பக்கம் எண் :

சீறாப்புராணம்

801


முதற்பாகம்
 

அவற்றை அழகு பெறக் கூறி இனி வேண்டுவதான அன்னிய சிந்தனை யாதொன்று மில்லையென்றும் கூறினார்.

 

2160. நன்பதந் தரும்புகழ் நபியைப் போற்றியா

     னென்பதி புகுந்தெமர்க் கியம்பி யொல்லையி

     னின்பதம் வரநிலை நிறுத்து வேனென

     வன்புற வுரைத்தெழுந் தயாசு போயினார்.

20

      (இ-ள்) அயா சென்பவர் நன்மை பொருந்திய மோட்ச பதத்தைத் தரா நிற்கும் கீர்த்தியை யுடைய நபிகட் பெருமானார் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்து நான் எனது ஊராகிய மதீனமா நகரத்தில் போய் நுழைந்து என் பந்து ஜனங்களுக்குச் சொல்லி விரைவில் அவர்களை உங்களிடத்திற்கு வரும் வண்ணம் சீர்ப்படுத்துவேனென்று ஆசையுறக் கூறி எழும்பிப் போனார்.

 

2161. தடந்திகழ் மதீனமா நகரைச் சார்ந்தினத்

     துடனபி யுரைத்தவை யுரைப்பக் கேட்டவர்

     திடம்பெற விஃதுநன் றென்னச் சிந்தையி

     னிடம்பெறக் களிப்பொடு மிருக்குங் காலையில்.

21

      (இ-ள்) அவ்வாறு போன அவர் வாவிக ளானவை பிரகாசியா நிற்கும் திரு மதீனமா நகரத்தை யடைந்து தமது கூட்டத்தார்களோடு நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் கூறிய வார்த்தைகளைக் கூற, அவர்கள் அதைத் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்றுத் திடங்கொள்ள இஃது நல்லதென்று மனசின்கண் இடம் பெறும் வண்ணம் மகிழ்ச்சியோடும் இருக்கின்ற சமயத்தில்.

 

2162. கொடுஞ்சிலைக் கசுறசு வென்னுங் கூட்டத்தா

     ரிடும்பகை யுடனிவ ரெதிர்ந்து தாக்கலும்

     விடும்பரி படைக்கலம் வீழ்த்திக் காறளர்ந்

     தடும்படை யொடுமுறிந் தவதி யாயினார்,

22

      (இ-ள்) கொடிய கோதண்டத்தை யுடைய கசுறஜூ வென்னுங் கூட்டத்தார்கள் இடா நிற்கும் பகைமையோடும் இவர்கள் எதிர்த்துத் தாக்கிய மாத்திரத்தில் அவர்கள் விடுகின்ற குதிரைகளையும் ஆயுதங்களையும் பூமியில் வீழ்த்தி விட்டுக் கால்கள் தளர்ச்சி யுற்று மேற்கொண்ட சேனையோடும் முறிந்து வருத்த மானார்கள்.

 

2163. பாடினிற் கசுறசு படையெ லாமுறிந்

     தோடின ரவுசெனுங் கூட்டத் தோர்க்கெனப்

     பீடுடைப் பெரும்புகழ் பெருகிச் சூழ்திசை

     நாடடங் கலுந்தெரி தரந டந்ததே.

23