இரண்டாம் பாகம்
ஹிஜிறத்துக் காண்டம்
மதீனத்தாரீமான் கொண்ட
படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2346.
மணிதிரண் டனைய
திண்டோண் முகம்மது மக்க மீதி
லணிபெற விருந்து
வல்லோ னருளொடு மதீனத் தேகிப்
பணிபரித் துவந்த
பாரிற் குபிரிருட் படல நீக்கித்
திணிசுடர்
நிலாத்தீ னோங்கச் செய்தவை யெடுத்துச் சொல்வாம்.
1
(இ-ள்) இரத்தினங்கள் ஒன்றோடொன்று திரண்டாற் போன்ற திண்ணிய தோள்களை யுடைய நாயகம் நபிகட்
பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வலிமை யுடையவனான
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் கிருபையோடும் சிறப்பாகத் திருமக்கமா நகரத்தின் கண்ணிருந்து
திருமதீனமா நகரத்திற்குச் சென்று ஆதிசேடனானது தனது பணாமகுடங்களாற் றாங்கி யுவப்படைந்த
இப்பூமியினிடத்துக் குபிராகிய அந்தகாரப் படலத்தை யொழித்துத் தீனுல் இஸ்லாமென்னும்
திண்மையைக் கொண்ட சந்திரப் பிரகாசத்தை அதிகரிக்கும் வண்ணம் செய்தவற்றை யாம் எடுத்துக்
கூறுவோம்.
2347.
கதிமனைக் குரிய
தாரை காட்டுநல் வினையு மூழற்
பதிசெய்தீ
வினையு மாறு பட்டொரு தலஞ்சேர்ந் தென்ன
விதிமறைக்
கதிர்மெய்த் தீனும் வெங்குபிர்க் களையு மொன்றாய்ப்
பொதுவறக் கலந்து
மக்கா புரத்தினி லிருக்கு நாளில்.
2
(இ-ள்) திருமக்கமா நகரத்ததின்கண்
மோட்ச வீட்டிற்குச் சொந்தமான வழியைக் காட்டா நிற்கும் நன்மை பொருந்திய செய்கையும்
நரகலோகத்திற் புகச் செய்யும் தீமை பொருந்திய செய்கையும் ஒன்றோடொன்று விரோதித்து ஓர்
தலத்திற் சார்ந்தாற் போல, அறிவினைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதப் பிரகாசத்தை
யுடைய உண்மையான தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கமும் கொடிய குபிராகிய களையும் ஏகமாய்க்
கலப்புற்றிருக்கின்ற தினத்தில்.
|