இரண்டாம் பாகம்
சுறாக்கத்துத் தொடர்ந்து படலம்
கலிநிலைத் துறை
2626.
அடுக்க லின்புற மூன்றுநா
ளிருந்துநா லாநாள்
விடுக்குஞ் செங்கதி ராதவன்
மேற்றிசைக் கடலு
ளொடுக்கு மெல்வையி னத்திரி
யிரண்டுட னுவனு
மிடுக்க ணின்றிமெய்த் திடத்தொடு
மவ்விடத் தெதிர்ந்தான்.
1
(இ-ள்) நாயகம் நபிகட்
பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் அவ்வாறு அந்தத் தௌறு
மலையின் கண் இனிமையுறும் வண்ணம் மூன்று நாள் மட்டு முறைந்து நான்காந்தினத்தில் செந்நிறத்தை
யுடைய கிரணங்களை விடா நிற்கும் சூரியனானவன் மேன்பாற் சமுத்திரத்தி னிடத்துத் தனதுடலை
யொடுக்கி மறையுஞ் சமயத்தில், இரண்டொட்டகங்களுடன் அந்தக் கூலியாளனும் யாதொரு துன்பமு
மில்லாமல் சரீரப் பலத்தோடும் அந்த விடத்தில் வந்து எதிர்ப்பட்டான்.
2627.
கதிர்பு குந்திருள் பரந்தது
தொத்தினன் கடிதி
னெதிரி னொட்டக மிரண்டுங்கொண்
டடுத்தன னினியிவ்
விதிரு மென்மலர்க் கான்செறி
வரையிடம் விடுத்துப்
புதிய தோர்நெறி புகவெழு மெனநபி
புகன்றார்.
2
(இ-ள்) அவன் அவ்வாறு
எதிர்ப்பட, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் சூரியன் மேற்பாற் சமுத்திரத்திற் போய் நுழைந்து அந்தகாரமானது எவ்விடத்தும் பரவிற்று.
அடிமையாகிய இந்தக் கூலியாளனும் நமது முன்னர் இரண்டொட்டகங்களையும் கொண்டு வேகமாய் வந்து
அடுத்தான். இனி நீவிர் அசையா நிற்கும் மெல்லிய புஷ்பங்களினது வாசனையானது நெருங்கப் பெற்ற
இந்தத் தௌறு மலையினது தானத்தை விட்டும் திரு மதீனமா நகரத்திற்குக் கொண்டு செல்லும் நூதனமாகிய
ஓர் பாதையின் கண் போய்ச் சேரும் வண்ணம் எழும்புவீராக வென்று சொன்னார்கள்.
2628.
முத்தி ரைத்திரு வாய்மொழி
முறைமையிற் சிதகாப்
பத்தி யினபூ பக்கரு முகம்மதும்
பரிவிற்
குத்தி ரப்புறம் விடுத்தெழுந்
தனர்கதிர் குலவச்
சித்தி ரத்திரு மதியிருந்
தெழுந்தன சிவண.
3
|