பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
57

ஸ்ரீ

1முதற்பத்து

முதல் திருவாய்மொழி - ‘உயர்வற’

1

         உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
         மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
         அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
         துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.

   
பொழிப்புரை : என் மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன்மைகள் முழுதும் இல்லை என்று கூறலாம்படி மேன்மேல் உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறிவின்மையாவும் நீங்க, பத்தியின் நிலையை அடைந்த அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன், மறதி என்பது சிறிதும் இல்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்; அந்நித்தியசூரிகட்குத் தலைவன் யாவனோ அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய்.

    விசேடக்குறிப்பு : ‘யவன்’ என்பது ‘யாவன்’ என்ற சொல்லின் விகாரம். மனன் - மனம்; மகரத்திற்கு னகரம் போலி என்பர்.

    இப்பதிகம் நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

 

1. நூறு பாசுரங்கள் கொண்டதொரு தொகுதியைப் ‘பத்து’ என்றும், பத்துப்
  பாசுரங்கள் கொண்ட பதிகத்தைத் ‘திருவாய்மொழி’ என்றும் வழங்குவர்;
  ‘பத்துப்பாட்டு ஒரு திருவாய்மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்,
  இப்படிப் பத்தான ஆயிரம்’ (2.  3 : 11.) என்ற வியாக்கியானம் காண்க.
  இம்முறையில், முதற்பத்து என்பதற்கு முதல் நூறு பாசுரங்கள் என்றும், முதல்
  திருவாய்மொழி என்பதற்கு முதல் பத்துப் பாசுரங்கள் என்றும் கொள்க.
  இங்ஙனமே பின் வருவனவற்றிற்கும் பொருள் கொள்க.