பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

204

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

மாலை ஆயிரத்துள் பன்னிரு நாமத்தைப் பற்றிய பண்ணோடு கூடிய இவை பன்னிரண்டு பாசுரங்களுள் அண்ணலுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.

    வி-கு : இத்திருவாய்மொழியில் வந்துள்ள பன்னிரண்டு திருப்பெயர்களும் ‘துவாதச மந்திரம்’ எனப்படும். ‘பன்னிருநாமம்’ என்றதூஉம் அது. நான்காம் அடியிலுள்ள ‘பண்’ என்பது, இசை.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத்திருவாய்மொழிதானே எம்பெருமான் திருவடிகளில் சேர்த்து விடும்,’ என்கிறார்.

    வண்ணம் மா மணிச் சோதியை - அழகிய நிறத்தையுடைத்தாய்ப் பெருவிலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை. 2‘நீலரத்தினம் போன்ற வடிவில் ஒளியை உடையவன்’ எனலுமாம். வண்ணம் - நிறம். மா-கருமை. இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்: அமரர் தலைமகனை - ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை. கண்ணனை - அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை. நெடுமாலை - ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தையுடையவனை. தென்குருகூர்ச் சடகோபன் பண்ணிய - வேதம் போன்று பிறப்பிலி அன்று; ‘புருஷனால் செய்யப்படாதது’ என்னுமதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று இயற்றினார் சிறப்பாலே. பண்ணில் ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் - இவை பண்ணிலேயாயிற்று நடந்தது. பன்னிரு நாமப் பாட்டு - வைஷ்ணவத்திற்கு அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில், அண்ணல் தாள் அணைவிக்கும் - சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்; ‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே கேசவன் தமராக்கிவிடும்,‘ என்பதாம்.                                     

(13)

_____________________________________________________________

1. ‘பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும்’ என்ற பதங்களைக் கடாஷித்து
  அவதாரிகை.

2. ‘வண்ண மாமணிச் சோதியை’ என்பதற்கு, அருளிச்செய்யும் பொருள் இரண்டனுள்
  முதற்பொருளில், வண்ணம் - அழகிய நிறம். மா - பெருமை. சோதி - விக்கிரகம்.
  இரண்டாவது பொருளில், ‘மா மணி வண்ணச் சோதி’ என மாற்றுக. வண்ணம் -
  விக்கிரகம்; ஆகுபெயர்.