பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 10

265

பொருந்தி இருப்பது ஆச்சரியம்’ என்றும், 1‘இராவணனும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைக் கண்டவாறே, ‘பையல், தானும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாய் இருக்கச் சம்மதித்தானாகில், இந்த ஐஸ்வரியம் குலையாதிருக்குமே!’ என்றும் நினைத்தான், ‘பகைவர்கட்கும் நன்மை வேண்டும்’ என்று இருக்கும் புத்தியையுடைய அனுமான்; தானும் ஒரு கூட்டத்துக்குத் தலைவன் ஆகையாலே இங்ஙனே இருப்பது ஒரு புத்தி பிறந்தது’ என்றும் கூறப்படுகின்றபடியே, திருவடி மதிக்கும்படியான இலங்கை ஆதலின், ‘ஏர் கொள் இலங்கை’ என்கிறார். நீறே செய்த - 2பிராட்டி அருளிச்செய்தபடியே சாம்பலே தங்கி இருக்கும்படி செய்த. நெடுஞ்சுடர்ச் சோதி - இராவணனைச் சேனைகளோடே கொன்றுகையும் வில்லுமான வீரஸ்ரீயோடே நின்ற நிலை. இதனால், ‘அவ் விரோதிகளைப் போக்கியது போன்று என்னுடைய விரோதிகளையும் போக்கவேண்டும்’ என்கிறார்.

    தேறேல் என்னை -‘நப்பின்னைப் பிராட்டியினுடைய சேர்க்கையில் தடையை நீக்க அமையும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் அளவில் அவளைப் பிரித்த இராவணனை முடிக்க அமையும்; அவர்கள் பண்டே உனக்காய் இருக்கையாலே, அவர்களை உனக்கு ஆக்க வேண்டா; அப்படியே ‘இவன் விரோதிகளைப் போக்கி நமக்கு ஆக்கினோமாகில் இனி என்?’ என்று இருக்க ஒண்ணாதே என்னளவில்!’ என்பார், ‘என்னைத் தேறேல்’ என்கிறார். ‘தேறேன்’ என்ற பாடமும் உண்டு; அப்பாடத்துக்குத் ‘தெளியேன்’ என்றாவது, ‘தரியேன்’ என்றாவது பொருள் கொள்க. ஆயின், செய்ய வேண்டுவது என்?’ என்ன, ஒல்லை உன் பொன் அடி சேர்த்து - ‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து’ என்று தொடங்கின அர்த்தத்தை முடிக்கிறார். கல்லுக்கும் அறிவு கொடுக்க வல்ல அடி ஆதலின், ‘பொன் அடி’ என்கிறார். ‘நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்விய ரேகையைப் போன்று சேர்த்தருளவேண்டும்’ என்பார், ‘சேர்த்து ஒல்லை’ என்கிறார். வேறே போக எஞ்ஞான்றும் விடல் - ‘இவனுக்கு எல்லா உயர்வுகளும் செய்து தந்தோம்; ஆகில், இனி என்?’ என்ன ஒண்ணாது; ‘நீ எல்லா உயர்த்திகளும் செய்து கொடுத்தாலும், நான் 3எல்லாத் தாழ்வுகளையும் செய்துகொள்வேன்;

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 9 : 12.

2. ‘பிராட்டி அருளிச்செய்தபடியே’ என்றது, ஸ்மஸானம் சத்ரூசம்பவேத்’ என்ற
  சுலோகத்தைத் திருவுள்ளம் பற்றி.

3. ‘எல்லாத் தாழ்வுகளையும்’ என்றது, விஷயாந்தரங்களை விரும்புதல் முதலானவை.