பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
228

    வி-கு : ‘அரியனாய் எளியனாய் அருள் செய்யும் ஈசன்’ என்க. ‘நன்று’ என்பது, ‘பெரிது’ என்னும் பொருளைக் காட்டும் உரிச்சொல்; ‘நன்றுபெரி தாகும்’ என்பது தொல்காப்பியம். ‘ஈசனைப் பற்றிச் சடகோபன் சொன்ன ஆயிரத்து இப்பத்து’ என்க. ‘இப்பத்தால் பத்தராகக் கூடும்; இப்பத்தைப் பயிலுமின்’ என ‘இப்பத்தை’ என்பதனை வருவித்து முடிக்க. வழுதி நாடு - பாண்டி நாடு. ‘திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்’ என்பது தனியன்.

    ஈடு :
முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்கவே பகவானிடத்தில் அன்பு உண்டாம்; இதனைக் கன்மின்,’ என்கிறார்.

    கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் - கண்களாற்காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய். காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். 1இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல். மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை - நித்தியசூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை. பண்கொள் சோலை - வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை; 2முக்கோட்டை போலேகாணும் சோலை இருப்பது.

    வழுதி நாடன் குருகைக்கோன் சடகோபன் சொல் - திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. பண்கொள் ஆயிரம் - வண்டுகளின் நினைவு

____________________________________________________ 

1. திருவாய்மொழியில் எங்கும் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களுக்கு நியாமகம்
  இப்பாசுரத்தின் முதல் அடியே என்று திருவுள்ளம் பற்றி, அவற்றுக்கு
  லக்ஷணம் அருளிச்செய்கிறார், ‘இவர்க்குப் பிரிவாவது’ என்று தொடங்கி.
  ‘கண்கள் காண்டற்கரியனாய்’ என்கையாலே இங்கே பிரிவு தோன்றுகிறது
  என்பது பாவம்.

2. ‘வண்டுகளினுடைய மிடற்றோசையெல்லாம் பண் மிக்கிருத்தலுக்குக் காரணம்
  என்? ‘என்ன, ‘முக்கோட்டை போலேகாணும் சோலை இருப்பது’ என்று
  அருளிச்செய்கிறார். முக்கோட்டை - 'மூகாம்பிகை; துர்க்கை.
  விநாயகருடைய கோயில்’ என்றும் கூறுப. ‘இதனை நினைத்தவர்கட்கும்
  பார்த்தவர்கட்கும் கவித்துவசத்தி உண்டாம்,’ என்று சொல்லுவர்.