பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
433

திருவேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள்

ஆழ்வார்களுடைய அருளிச்செயல்கள்:

    இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பதின்மருள் ஒன்பதின்மரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்தது திருவேங்கடம். ‘ஏதமில் ஆயிரம்’, ‘கெடலில் ஆயிரம்’, ‘பொய்யில் பாடல் ஆயிரம்’, ‘ஆணை ஆயிரம்’, ‘வழுவிலாத ஒண்தமிழ்கள் ஆயிரம்’, ‘அழிவில்லா ஆயிரம்’, ‘பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்’, ‘மெய்ந்நாவன் மெய்யடியான்’ என்பன போன்றவைகளால் ஆழ்வார்களுடைய ஸ்ரீ சூக்திகள் ‘வாய்மொழி’ என்பது பெறுதும்.

    ‘சித்த சித்தொ டீச னென்று செற்று கின்ற மூவகைத்
    தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்’

என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

    ‘நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
    ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே’

    ‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’

    ‘இன்பப் பாவினை’

    ‘மன்னு மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
    தென்னன் தமிழை வடமொழியை’

    ‘அமரர்கள்தம் தலைவனை அந்தமிழ் இன்பப்
     பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
     பயிலரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
     கோவினை’

என்பன போன்ற வாய்மொழியின் பொருளை ஓலைப்புறத்தே கேட்டுப் போகாதே எல்லாரும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி அவ்விறைவன் வந்து நிற்கின்ற இடம் இத்திருமலை என்பதனை நாம் நினைவிற்கோடல் வேண்டும். பாஷைகளுக்கு எல்லை நிலம் அன்றோ திருவேங்கடம்?