பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
152

1

    1பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி, 2நித்தியவிபூதியையும் லீலாவிபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து, ‘கண்டீரே நாம் இருக்கின்றபடி? இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே 3ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று 4இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி, ‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.

_____________________________________________________

1. மேல் திருவாய்மொழியோடே இயைபு அருளிச்செய்கிறார், ‘பெருமாளும்’
  என்று தொடங்கி. மேலே, ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத்
  திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
  திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச்சேர்த்தியைச் சேர்த்து
  வைக்கின்றவர்கள்கூட இருக்கச் செய்தே பிரிகையும், போலி கண்டு
  மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும், இரண்டு
  இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத்
  தெரிவித்தபடி. அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு,
  நித்தியசூரிகள்; அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி. அங்குப்
  பரிகரம் மஹாராஜர் முதலானோர்; இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு
  மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை. அங்குப்
  பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே
  தாளத்தைக் கொடுக்க, இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்
  என்க.

2. ‘வீற்றிருந்தேழுலகும்’ என்ற பாசுரத்தைக் கடாக்ஷித்து, ‘நித்திய விபூதியையும்’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘சொல்மாலைகள் ஏற்ற’ என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம் பற்றி, ‘ஒரு
  சொல்லுச்சொன்னால்காணும்’ என்கிறார்.

4. ‘போற்றி’ என்றும், ‘இசைமாலைகள் ஏத்தி’ என்றும் வருகின்றவற்றைத்
  திருவுள்ளம் பற்றி, ‘இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க’ என்கிறார்,
  ‘போற்றி என்றே’ என்றதனை நோக்கி, ‘மங்களாசாசனம் பண்ணி’ என்கிறார்.