பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
295

பிடித்தாரையும், உயிர் நிலையிலே நலிந்தாரையும் நலியுமவன்’ என்பதாம்.

    நீறு ஆகும்படியாக - 1‘அறுக்கப்பட்டனவாகவும் பிளக்கப்பட்டனவாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டனவாகவும்’ என்கிறபடியே, தூளியாகும்படியாக நினைத்து ஆயுதம் எடுக்குமவன் ஆதலின், ‘நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்கிறார். மாறாளன் - ‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். 2துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன, ‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே, தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ? கவராத மணி மாமை குறை இலமே - பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால் ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். 3நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது? அல்லது, நிறக்கேடாமித்தனை அன்றோ?  

(1)

_____________________________________________________

1. ஸ்ரீராமா. யுத். 94 : 12.

2. ‘எல்லா உயிர்களிடத்திலும் ஒத்த அன்பினையுடைய சர்வேசுவரனுக்குப்
  பகைவர் ஆவார் உளரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘துரியோதனன்’ என்று தொடங்கி. இது, பாரதம், உத்தியோக பர். 74 : 27.
  என்றது, ‘அடியார்க்குப் பகைவர்கள், தனக்கும் பகைவர்கள்’ என்றபடி.
  மேற்காட்டிய சுலோகப் பொருளோடு,

  ‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
  மின்னில்மின்னிலகு விறல்நெடும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்
  உன்னி லின்னமுள தொன்று பஞ்சவ ருரைக்க வந்தஒரு தூதன்யான்
  நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ?’

  என்ற வில்லி பாரதச் செய்யுளை ஒப்பு நோக்குக.

3. ‘அழகிய நிறமாகில், அதனை வேண்டா என்றது என்?’ என்ன, ‘நிறத்திலே’
  என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘நிறத்திலே’ என்றது,
  சிலேடை : நிறத்திலே என்பதும், முறையிலே என்பதும் பொருள்.
  நிறக்கேடாம் - ‘நிறத்திற்குத் தாழ்வாம்’ என்பதும், ‘முறையிலே
  செய்ததன்றிக்கே ஒழியும்’ என்பதும் பொருளாம்.