பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
448

New Page 1

‘இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது. மாறன் சடகோபன் - பகவானை அடைவதற்குத் தடையாக உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர். வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் - தம்முடைய ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும் இப்பத்தையும் வல்லார். சிலர் ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

    மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது - இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது. இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப்பொருளில் ‘மற்றது’ என்பது இடைச்சொல். அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழியாக்கி, ‘மற்றையதான - அதாவது, இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம். அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்துவ ஞானமே பிரயோஜனம் போரும்; அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒன்று மிலைத்தேவிவ் வுலகம் படைத்தமால்
அன்றிஎன ஆரும் அறியவே - நன்றாக
மூதலித்துப் பேசியருள் மொய்ம்மகிழோன் தாள்தொழவே
காதலிக்கும் என்னுடைய கை.

(40)

நான்காம் பத்து ஈட்டின் தமிழாக்கம்

முற்றிற்று

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை மலரடி வாழ்க!
நம்பிள்ளை நற்றாள் வாழ்க!

மாறன் மலரடி வாழ்க!