பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
232

    வி-கு :- கொண்டுபுக்கு அகற்றினீர் என்க. பௌவம் - கடல், பிதற்றி நிற்கும் - பிதற்றிக்கொண்டு நிற்கின்றாள்.

    ஈடு :-
மூன்றாம்பாட்டு. 1திருநாளிலேதான் கொண்டுபோக வேண்டினால், திருச்சோலை உள்ளிட்டுக் கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.

    கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு - திருப்பொருநல்கரையைப் பொழில் விழுங்கி இருக்கை. 2கரையைப்பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி. அன்றிக்கே, 3அந்தத்திருச்சோலையை உங்களுடைய நல்வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது! என்னுதல். பரந்த பொழிலையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைய திருத்தொலைவில்லி மங்கலத்திலே கொடுபுக்கு. உரைகொள் இன்மொழியாளை - 4“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம் குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, பொருளில் இழியவேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, ‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்; அன்றிக்கே, உரை - அடைவு சொல் என்னுதல். நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் - அந்தப்பேச்சில் வாசிஅறிந்து அநுபவிக்கமாட்டாமல், நீங்களே ஆசையின்றி அகற்றினீர்கோள்.

 

1. “கரைகொள் பைம்பொழில் தண்பணை” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “கரைகொள்” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச் செய்கிறார்
  ‘கரையைப் பொழில்’ என்று தொடங்கி. ‘குணம் கொண்டபடி’ என்றது,
  “நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

3. “பொழில்” என்கிற பதத்திலே நோக்காக, வேறும் ஒரு மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘அந்தத் திருச்சோலையை’ என்று தொடங்கி.

4. “உரைகொள்” என்பதற்கு, ஐந்து வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
  உரை என்பதற்கு, ஸ்ரீமத் இராமாயணம் என்பது முதற்பொருள். இதனையே
  அருளிச்செய்கிறார் ‘படிப்பதிலும்’ என்று தொடங்கி.

  “பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”

 
என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.