பக்கம் எண் :

139

திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த
சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக
இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது
பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான்
அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல்
என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு
முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன
என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை
அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு
மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அறையர் என்பர்
“பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது
பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது
விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக்
கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான
“நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக
எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

     13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக்
கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார்
என்றும் புராணம் கூறும்.

     14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும்,
திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10
பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு
பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

     15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது
இத்தலம்தான்.

     16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம்
எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.