கிடந்தவாரும் என்பதற்கும் திருவெஃகாவிலே கிடந்தபடியுமாதல் என்பது நம்பிள்ளை ஈடு. ஆ) பிச்சச் சிறு பீலி சமன் குண்டர் முதலாயோர் விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப் பணியாதே கச்சிக் கிடந்தவனூர்க் கடல்மல்லைத் தலசயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன் நணி நெஞ்சமே -பெரிய திருமொழி 2-6-5 | கச்சிக் கிடந்தவன் என்ற இச்சொல்லுக்கு வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரிய வாச்சான் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார். ‘ஆச்சரிதர்க்காகத் திருவெஃகாவிலே படுக்கை மாறி கைம்மாறிக் கிடந்தவனை’ அடடா எத்துனை ஆதாரப் பூர்வமாக விவரித்துள்ளார். இ) அன்றிவ்வுலக மளந்த அசைவே கொல் நின்றிருந்து வேளுக்கை நீணகர் வாய் - அன்று கிடந்தானைக் கேடில் சீரானை - முண் கஞ்சைக் கிடந்தானை நெஞ்சமே காண் | என்ற பேயாழ்வாரின் மூன்றாந்திருவந்தாதியில் 34 ஆம் பாடலில் கஞ்சைக் கிடந்தான் என்பது திருவெஃகா கிடந்தவனே என்றே பூர்வாச்சார்யர்கள் எடுத்தாண்டுள்ளனர். 11) அஷ்ட பிரபந்தம் இத்தலம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது. உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும் பிரைகலந்த பால்போல் பிறிதாம் - தரையில் திருவெஃகா மாயனுக்கே சீருறவார், தங்கள் உருவெஃகா வுள்ளத்தினோர்க்கு. | |