மணவாள மாமுனிகள் இங்கு ஒருவருட காலம் தங்கியிருந்து பகவத் விஷயமாக இங்கு உபன்யாசம் நிகழ்த்தியுள்ளார். பிள்ளை லோகாச்சார்யர் இங்கு பெரும்போது போக்கியுள்ளார். இவருக்கு இங்கு தனிச் சன்னதி உள்ளது. 6. பேயாழ்வார் 4 பாசுரங்களாலும் நம்மாழ்வாரும், பொய்கை யாழ்வாரும் தலா ஒவ்வொரு பாசுரத்தாலும், திருமழிசை 3 பாசுரங்களாலும் திருமங்கையாழ்வார் 6 பாசுரங்களாலும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். 7. நடந்த கால்கள் நொந்தனவோ என்று திருமழிசையாழ்வார் குடந்தை ஆராவமுதனை மங்களாசாசனம் செய்தமைக்கு இத்தலத்திற்கருளிய தலைப்பிலிட்ட பேயாழ்வாரின் பாடலே முன்னோடியாக இருந்ததென்றும் கூறலாம். 8. சங்ககாலத்திலும் இத்தலம் மிகப்புகழ்பெற்று இருந்தது. சங்க இலக்கியங்களில் இத்தலம் குறிக்கப்படுகிறது. 9. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால் பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையே குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்கொண்டுள்ளனர். 10. தொன்மை மிக்க இத்தலத்தையும் இங்கு எழுந்தருளிய பெருமாளையும் கிடந்தான் என்ற சொல்லாலே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அதாவது கிடந்தான் என்னும் சொல் இப்பெருமாளைக் குறிப்பதாகவே பூச்வாச்சார்யர்கள் பொருள் கொண்டுள்ளனர். தலத்தின் பெயரைக் (திருவெஃகாவை) குறிப்பிடாமல் கிடந்தான் என்ற சொல்லுக்கே இப்பெருமாளையும் இத்தலத்தையும் மங்களாசாசனம் செய்துள்ளதாகக் கொண்டுள்ளனர். உ-ம் அ) நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாரும் நினைப்பிரியன ஒன்றலா அருவாய உருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைக்கின்றேன் உனையெங்ஙணம் நினைக்கிற்பேன் - பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகுண்ட வொன் சுடரே -திருவாய்மொழி 5.10-6 | |