பக்கம் எண் :

319

     கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
          மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
     செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
          பைந் நாகப் பாய் விரித்துக்கொள்
         என்று சொன்னதும்

     எம்பெருமான் மீண்டும் காஞ்சிக்கு வேகமாக திரும்பி
சயனித்துக்கொண்டான். அவசர நிமித்தத்தில் வலமிருந்து இடமாகச்
சயனித்துவிட்டார் என்று காரணங் கூறுவர்.

     ஆ) ஒரு முறை இடம் பெயர்ந்து மீண்டும் அதே இடத்திற்கு
எழுந்தருளியதால் வலமிருந்து இடமாக மாறிச் சயனித்தார் என்றும் கூறுவர்.

     இ) வேகவதியாக சரஸ்வதி மாறி விரைந்தோடி வரும்போது அந்த
நதியைத் தடுக்க தாமும் வேகமாக வந்த பெருமாள் சடக்கென சயனிக்க
எத்தனித்த நிலையில் தம்நிலை மாறிச் சயனித்தர் என்றும் கூறுவர்.

     3. திருமழிசையாழ்வாருடனும், கணிகண்ணனுடனும் பெருமாள் ஒரு
இரவு தம் யாக்கையை கிடத்தி இருந்த இடம் ஓரிரவு யாக்கை என்ற
பெயராலேயே பன்னெடுங் காலமாக அழைக்கப்பட்டு வந்தது.
தம்மிஷ்ட்டத்திற்குத் தமிழை திரிப்பவர்கள் தலைதூக்கிய காலத்தில் ஓரிரவு
யாக்கை என்னும் இந்த அழகிய காரணப் பெயர் ‘ஓரியாக்கை’
என்றாக்கப்பட்டது. காஞ்சிக்கு சமீபத்தில் இந்த ஊர் இன்றும் ஓரியாக்கை
என்றே வழங்கப்பட்டு வருகிறது.

     4. திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு
ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக
நடைபெறுகிறது. அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை
வரை சென்று மீள்வர்.

     5. பக்தர்களும், ஆச்சார்யர்களும் மண்டிக்கிடந்த ஸ்தலமாகும் இது.
பொய்கையாழ்வார் இங்குதான் அவதாரம் செய்தார். திருமழிசையாழ்வார்
நெடுங்காலம் இங்கு தங்கி இருந்தார். கணிகண்ணன் இப்பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்து உய்ந்தவர். திருமங்கை உட்பட ஐந்து ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்து பாமாலையிட்டுள்ளனர்.