12. இத்தலத்தின் பெருமாளை நோக்கிப் பிள்ளைப் பெருமாளையங்கார் கூறுகிறார் நீ உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்த்தவர்களையும் அவர்களது குற்றங்களை மறந்து மன்னித்து உன்பால்சேர்த்துக்கொள்ளும் நீர்மைக் குணம் பெற்றுள்ளாய். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். உன்னிடம் சரணடைந்தவர்களைக் கைவிட்டதில்லை. உன் சரணாகதி தத்துவத்திற்கும் அளவே இல்லை. அப்பேர்பட்ட நீ நேர்மையில்லா கொடிய உள்ளம் பெற்ற அடியேனின் தீச் செயல்களையும் பொறுத்தருளி என்மீதும் இரக்கம் காட்டு என்கிறார். நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ள அப்பாடலை இப்போது காண்போம். நீர்மை கெட வைதாரும் நின்னோடெதிர்த்தாரும் சீர்மை பெற நின்னடிக்கீழ் சேர்கையினால் நேர்மையிலா யெவுள்ளத் தனேன் செய்கையை பொறுத்தருளி யைவ்வுள்ளத்தனே நீ யிரங்கு | 13. இப்பெருமாளை பரிபூர்ண அன்போடு வழிபட்டவர்கட்கு உத்தியோக காரியங்கள் எல்லாம் கைகூடும். பதவிகள் கிடைக்கும். உலகையாளும் தகுதியைப் பெறுவர். அவ்வாறில்லாவிடின் அமருலகையாழ்வார் என்கிறார் திருமங்கையாழ்வார். எனவே உத்தியோக வாய்ப்புக்களின் பொருட்டு இப்பெருமாளை வேண்டிக்கொள்வோரின் வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன. மயங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண்டமிழ் செய் மாலை யீரைந்தும் வல்லார் அண்டைமாள்வ தானையன்றே லாள்வ ரமருலகே. (1067) | |