பக்கம் எண் :

402

     குருவாயூரிலிருந்தும், கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்தும்
தமிழ்நாட்டின் பெரிய நகரங்கள் பலவற்றிலிருந்தும் பாலக்காட்டிற்குப் பேருந்து
வசதி உள்ளது.

     ரயில் மார்க்கத்தில் செல்பவர்கள் சென்னையிலிருந்து கள்ளிக் கோட்டை
செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ள பட்டாம்பி ரயில் நிலையத்தில் இறங்கி
சுமார் 2 மைல் தொலைவு சென்று இத்தலத்தை அடையலாம்.

வரலாறு.

     பல புராணங்களிலும் இத்தலவரலாறு பேசப்படுகிறது. துவாபர யுகத்தில்
தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில்
தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம்
ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த
அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர்.
நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.

     முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான்.
அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு
சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால்
பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

     இவ்வாறு நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில்
இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த
முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி
வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி
வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி
விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர்.

     வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச்
செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில்
தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது
அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக
சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது.