| வேண்டுமென பிரம்மன் வேண்டிக்கொண்டான் அதுமுதல் குருகூர் ஆயிற்று. நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வள நாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச் தலைநகராகக்கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. குருகாகிய சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்றென்பர். நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திரு நகரியாயிற்று. கம்பரும் தமது சடகோபரந்தாதியில் குருகூர் என்றே எடுத்தாண்டுள்ளார். சுரக்குந்திருவும் வறுமையுந் தீரும் தொடக்குவிட்டுக் கரக்கும் இருவினை மேன்மையும் கானும் கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர் வளம் பாடுமினே என்று பாடியுள்ளார். | இது தவிர்த்து இந்த தலத்திற்கு தாந்த ஷேத்ரம், வராஹ ஷேத்ரம், சேஷஷேத்ரம், தீர்த்த ஷேத்ரம் என்று பல பெயர்களுண்டு. தாந்த ஷேத்ரம் (புராண வரலாறு) சாளக்கிராமத்தில் வேதம் பயின்ற அந்தணச் சிறுவர்களில் “மந்தன்” என்பவன் சரிவர வேதம் பயிலாதது மட்டுமன்றி வேதத்தை இகழ்ந்துரைக்கவும் பழிச்சொல் பேசவும் செய்யலானான். இதனால் வெகுண்ட அவனது ஆசிரியர் நீ இழிஞனாய் மறுபிறப்பில் இழி குலத்தில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். ஆனால் மந்தன் சற்றும் மனந்தளராது அங்கிருந்த விஷ்ணு கோவில்களில் புல்லை செதுக்கி சுத்தப்படுத்திவந்தான். இவனது கைங்கர்யத்தால் மனமகிழ்ந்த மகாவிஷ்ணு இவனை ஆட்கொள்ள நினைத்தார். தனது அந்திமகாலத்தில் பூதவுடல் நீத்த மந்தன் மறுபிறவியில் தாந்தன் என்றபெயரில் கீழ்க்குலத்தில் பிறந்து நல்ல ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கி நல்லோர் வழிகாட்ட விந்திய மலைக்கு வந்தான். அங்கு விண்ணில் பேரொளி தோன்ற அதைத் தொடர்ந்து தண்பொருணல் ஆற்றங் கரையில் உள்ள சங்கணித்துறைக்கு வந்து குருகூர் அடைந்து ஆதிநாதனை வழிபட்டுவந்தான். |