பக்கம் எண் :

681

     6. எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக,
உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

     7. 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட
நாடாகும் இது. நம்மாழ்வார் வைகுந்தம் செல்லும் காட்சிகளை பத்துப்
பாசுரங்களில் விளக்குகிறார்.

     8. திருநாடு செல்வோரை (மோட்சம் புகுவோரை) மண்ணும் விண்ணும்
தொழும். அவர்கள் திருநாட்டிற்கு எழுந்தருளிய உடனே மண்ணுலகைச்
சூழ்ந்துள்ள மேகக் கூட்டங்கள் எல்லாம் தூரியம் போல் முழங்குகின்றன.
கடல் அலைகள் கையெடுத்து வணக்கம் செய்கின்றன. பூவுலகு இவ்வாறு
மரியாதை செய்தால் விண்ணுலகில் தேவர்கள் விரைந்து வந்து எமதில்லத்தில்
தங்குங்கள், எமதிருப்பிடத்திற்கு வாருங்கள் என்றழைத்து மரியாதை
செய்கின்றனர்.
 

     சூழ்விசும் பணி முகில்
          தூரியம் முழக்கின
     ஆழ்கடலலை திரைக்
          கையெடுத்தாடின - என்றும்
     எதிரெதிர் இமையவர்
          இருப்பிடம் வகுத்தனர் - என்றும்
     மாதவன் தமரென்று
          வாசலில் வானவர்
     போதுமின் எமதிடம்
          புகுதுக வென்றலும்

     என்று நம்மாழ்வார் திருநாடு செல்வோருக்கு வழிநடை கிடைக்கும்
மான்புயர் வரவேற்புகளை 10 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.