பெரியபுராணம்
பாயிரம்
கடவுள் வாழ்த்து
1.உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.
உரை
2.ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாரும் ஆல்-
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லை உள்
மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ.
உரை
3.எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக் கை ஐந்து உடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்து உள் இருத்து வாம்.
உரை
4.மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை, முன்
துதி செயும் நாயன் மார் தூய சொல் மலர்ப்
பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேர் அவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.
உரை
5.அளவு இலாத பெருமையர் ஆகி,
அளவு இலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட, உரைப்ப அரிது ஆயினும்
அளவுஇல் ஆசை துரைப்ப, அறைகுவேன்:
உரை
6.தெரிவு அரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொரு அரும் சீர், புகலல் உற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் உற்று உண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமை யேன்.
உரை
7.செப்பல் உற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை, யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு, என் உரை சிறிது; ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர்; மேன்மை ஆல்.
உரை
8.மேய இவ் உரை கொண்டு, விரும்பும் ஆம்-
சேயவன் திருப் பேர் அம்பலம், செய்யா
தூய பொன் அணி சோழன், நீடு ஊழி பார்
ஆய சீர் அந பாயன் அரசு அவை.
உரை
9.‘அருளின் நீர்மைத் திருத் தொண்டு அறிவரும்
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம்?’ எனின்
‘வெருள் இல் மெய்ம் மொழி வான் நிழல் கூறிய
பொருளின், ஆகும் எனப் புகல்வாம் அன்றே.
உரை
10.இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
உரை