2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
7. விறன்மிண்ட நாயனார் புராணம்
1.விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு,
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு.
உரை
2.வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்.
உரை
3.என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம்.
உரை
4.அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்;
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
எப் பற்றினையும் அற எறிவார்; எல்லை தெரிய ஒண்ணாதார்;
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார்; எம்பிரானார் விறன் மிண்டர்.
உரை
5.நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்.
உரை
6.பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆளுடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்று வைதிகத் தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார்; நிகர் ஒன்று இல்லாதார்.
உரை
7.‘திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு’ என்று உரைப்பச் சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்.
உரை
8.‘சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மைப் பிறை சூடிப்
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு’ என்று உரைக்க, மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்.
உரை
9.ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின்
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன் ஆம் உளது என்றால்,
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்?
உரை
10.ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெரும் தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்.
உரை
11.வேறு பிரிது என்? திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்குக் காரணர் ஆம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை,
கூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேல் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்.
உரை