ஈர்அறம் -
இரண்டு + அறம். 'ஆல்' அசைநிலை.
21 |
துன்புமிக
வைம்பொறியைத் துமித்த தன்மைச் சுடர்ஞானத்
தன்புமிகப் புடைசூழ்ந்த வரிய மோன ரருந்துதிரென்
றின்புமிகக் கனிந்தகனி யிளந்தீங் கந்தத் தோடளித்த
பின்புமிக வருள்மூத்தோன் பெயர்ந்த நாடெந் நாடென்றான். |
|
துன்பு மிக ஐம்
பொறியைத் துமித்த தன்மைச் சுடர் ஞானத்து
அன்பு மிகப் புடை சூழ்ந்த அரிய மோனர், "அருந்துதிர்" என்று
இன்பு மிகக் கனிந்த கனி இளந் தீம் கந்தத்தோடு, அளித்த
பின்பு, மிக அருள் மூத்தோன், "பெயர்ந்த நாடு எந் நாடு?" என்றான். |
உடலுக்கு வருத்தம்
மிகுமாறு ஐம்பொறிகளையும் கொன்ற தன்மையால்
தம்மிடம் ஒளிரும் ஞானத்தின் அளவாக அன்பு மிகப் புடை சூழ்ந்த அரிய
முனிவர்கள், இனிய இளங் கிழங்குகளோடு இன்பம் மிகுமாறு கனிந்த
பழங்களையும், "உண்ணுங்கள்" என்று தந்த பின்பு, அவருள் மிக அருள்
கொண்ட முதியவன் ஒருவன், சூசையை நோக்கி, "நீங்கள் பெயர்ந்து வந்த
நாடு எந்த நாடு?" என வினவினான்.
ஐம்பொறியைத்
துமித்தலாவது, குறளிற் கண்டபடி, 'ஐந்தவித்தல்'
என்க. இம் 'மூத்தோன்' பெயர் அதிட்டன் என்பது 23-ம் பாடலிற் காண்க.
22 |
திருப்புகழே புகழ்மறையே திருவே நூலே குடிவைகும்
மருப்பொழிலே விரைப்பணையே வளர்யூ தேய நாட்டிலிருந்
துருப்புகைவெம் வனச்சுரம்வந் துவப்ப விங்கண் சென்றனமென்
றிருப்பெனவே மறையுந்து மிரத மார்பன் வளன் சொன்னான். |
|