பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 791

 பிறிதின் இயைபின்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவாம் மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையோர்; உண்டோ இன்றோ?
அன்றியும் தமிழ்நூற்கு அளவுஇலை; அவற்றுள்
ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?
அன்றியும் ஐந்துஎழுத் தால்ஒரு பாடைஎன்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே
ஆகையால் யானும் அதுவே அறிக

வடநூலைவிட்டுத் தனியே தமிழ் நூல் நடவாதது நியாயமே என்பது தோன்ற, ‘வடநூல்வழி கலவாதே’ என்பது முதலாக ‘யானும் அதுவே’ என்பது ஈறாக! வினாவிடையால் கூறினாம்.

[வி-ரை: தமிழறிவு நிரம்பப்பெறுதற்கு வடமொழி அறிவும் தேவை என்பது தமிழறிஞர் பலருக்கும் உடன்பாடு. அன்றியும் தமிழ்ச் செய்யுட்களில் வடசொற்களையும் முறைப்படிகலக்கலாம் என்பது ‘இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று, அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’ தொ.சொ.எ.1 என்ற தொல்காப்பிய நூற்பாவானும் வலியுறும்.

அல்லதூஉம் வடநூல் உணர்ந்தார்க்கன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்றதூஉம் என்க என்று சிவஞான முனிவரும் சூத்திரவிருத்தியில் குறிப்பிட்டுள்ளார். ஐந்தெழுத்து - தமிழ்ச் சிறப்பெழுத்துக்களாகிய ற ன ழ எ ஒ என்பன. தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற இவ்வெண்ணம் 17ஆம் நூற்றாண்டில் நிலவியிருந்தது.

‘இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்காறு அல்ல செய்யு ளாறே’                                  -தொ.சொ. 18

எனவே, அடைகள் இனஞ்சுட்டுவன. இனம்சுட்டாதன என இருவகைய. இனம்சுட்டாத அடைகள் இயைபின்மை நீக்கும் விசேடணங்களாம்.

இயைபின்மை நீக்கலும், பிறிதின் இயைபு நீக்கலும் என விசேடித்தல் இருவகைத்து. -தொ.சொ. 182 சேனா.