செயப்படுபொருள் விரி 31 | *கருத்துண் டாதல், கருத்தின் றாதல், இருமையும் ஆதல், ஈருருபு இணைதல், கருத்தா ஆதல், அகநிலை ஆதல், தெரிநிலை ஆதியாய் வரும்செயப் படுபொருள்; இயற்றப் படுதல், எய்தப் படுதல், வேறு படுக்கப் படுதல் ஆதியும், அவ்வெழு வகையுள் அடங்கும் என்ப.
| |
[வி-ரை: வாக்கியபதீயத்துள்ளும் கையடத்துள்ளும் செயப்படுபொருள் நிருவர்த்தியம் - விகாரியம் - பிராப்பியம் என்று பகுக்கப்பட்டிருத்தலை உட்கொண்டு, சேனாவரையர் முதலாயினார் செயப்படுபொருளை, இயற்றப்படுதல் - வேறுபடுக்கப்படுதல் - எய்தப்படுதல் என மூன்றாகப் பகுத்தனர். வீரசோழிய நூலார் 41 ஆம் காரிகையில் செயப்படுபொருளைப் பற்றுக்கருமம், வீட்டுக்கருமம் இருபுறக் கருமம், தான்தெரி கருமம், தான்தெரியாக் கருமம், கருத்தாகக்கருமம் தீபகக்கருமம் என ஏழுவகையாக விளக்கினார். பிரயோக விவேக நூலார் தெரிநிலைச் செயப்படுபொருள் - தெரியா நிலைச் செயப்படுபொருள் என இரண்டாகப் பகுத்துத் தெரிநிலைக்கு உட்பிரிவுகள் இல்லை என்று கூறித் தெரியாநிலையைக் கருத்துண்மை - கருத்து இன்மை - இருமை - ஈருருபு இணைதல் - கருத்தாவாதல் என ஐவகையாகப் பகுத்து, மிகைச் சொல்லால் அகநிலையும் கொண்டார். ஆகவே இவ்வாசிரியர் குறிப்பிடும் எழுவகைச் செயப்படுபொருள் பிரயோகவிவேகம் குறிப்பிடுவனவே. வீரசோழித்துள் சிறிது வேறுபாடுள்ளது.] எ-டு: சோற்றை உண்டான் - கருது உண்டாதல். சோற்றைக் குழைத்தான் - கருத்து இன்றாதல். எறும்பை மிதித்து வழியைச் சென்றான். பசும்புல்லை மிதித்துப் பலவூரை அடைந்தான். துகளொடு கூழை உண்டான்.
* நன்னூல் 296. முனிவர் உரை. |