பக்கம் எண் :

1482தணிகைப் புராணம்

திருச்சிற்றம்பலம்

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி

விநாயகர் காப்பு

 உயிர்க்குங் கைத்தல மொன்றுடை யாற்பணிந்
 தயிர்க்கு மச்ச மறுத்தடி யாருளம்
 செயிர்க்கு ழாஞ்சிதை யுந்தணி கேசனைப்
 பயிர்க்கு மேக மெனப்பயில் விப்பரால்.

(குறிப்புரை.) உயிர்க்கும் கைத்தலம் - மூச்சு விடுகின்ற கை, துதிக்கை. ஒன்று உடையான் : விநாயகர். அயிர்க்கும் அச்சம் - மறதியால் வரும் அச்சம். செயிர்க்குழாம் - அவா, வெகுளி, அறியாமை முதலிய குற்றங்களின் தொகுதி. தணிகேசன் - திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் இறைவன், முருகன். பயில்விப்பர் - இடைவிடாது போற்றுவார்கள்.

பயிர்களுக்குக் கார்முகில் எப்படியோ அப்படி மன்னுயிர்க்கு முருகன் அருள் இன்றியமையாதது. கைத்தலம் ஒன்று உடையாற் பணிந்து அச்சம் அறுத்து அடியார் தணிகேசனைப் பயில்விப்பர் என முடிபு கொள்க. 'செயிர்க்குழாம் சிதையும்' என்பது தணிகேசனுக்கு உரிய அடைமொழி.

கைத்தலம் ஒன்று உடையானைப் பணிந்து தொடங்கும் செயல் இனிது முடியும் என்பது கருத்து.

நூல்

 எழுத்தி னவ்வுயி ரென்ன நிறைந்தளாய்
 முழுத்த பேரறி வாய்முத லாகிய
 வழுத்து சீர்த்தித் தணிகை மணாளனை
 அழுத்து முள்ளத் தவர்க்கஞ ரில்லையே.

(கு - ரை.) எழுத்தின் 'அ' உயிர்என்ன - எல்லா எழுத்துக்களின் ஒலியிலும் அகர உயிரின் ஒலி கலந்து இருப்பது போல் நிறைந்து அளாய் - எங்கும் எல்லா உயிர்களிலும் கலந்து நிறைந்து. பேரறிவாய் - அறிவுருவாய். முதல் - முதற்கடவுள். அழுத்தும் உள்ளத்தவர் - இடைவிடாது நினைக்கும் அடியார். அஞர் - துன்பம்.