பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்561

 

அவனுக்கே யிடமாகக்கொண்டு. கள்ளம் - வஞ்சகம்; ஆன்ம உணர்வு. - (6) வஞ்சம் - நினைக்கவொட்டாது தடுத்து இடுக்கண் செய்யும் புலனாசை. "மாறி நின்றெனை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழி" (திருவா). ஐவர் நினைக்குறார் என்று தீமைதீர்க்க வழி கூறியவாறு. அந்த ஐவரின் வஞ்சம் என்க. - (7) குறைந்து உக்கவர் - குறைசொல்லிப் பணிந்து அடைந்தவர். "நாளுமிகும் பணிசெய்து குறைந்தடையு நன்னாளில்" (1310), "பற்பாவும் வாயாரப் பாடி யாடிப் பணிந் தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க; கிற்பானை" (கீழ்வேளூர். தாண் - 2). உக்கவரும், மொழியாரவரும் வணங்க என்று எண்ணும்மை தொக்கன. - (8) வாதை - பிறவிநோய். - (9) உருவகம். ஓட்டை மாடம் - எண்ணிறந்த ஓட்டைகளுள்ள உடல். காட்டில் வேவதன் முன் - சாவு வந்து உடலைச் சுடு காட்டில் எரிப்பதன்முன். இறத்தல் உறுதியாதலின் அதன்முன் என்க. - (10) சீரம் - சிரமம் என்றது சீரம் என வந்தது மரூஉ. "வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்" (தேவா).

தலவிசேடம் :- திருவான்மியூர் - தொண்டைநாட்டின் 25-வது தலம். வான்மீக மகா இருடிக்கு அருள்செய்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. தேவர்கள் கடல் கடைந்து பெற்ற அமுதத்தால் சிவலிங்கந் தாபித்து பூசித்த தலமாதலின் இறைவர் மருந்தீசர் எனவும் வழங்கப்படுவர். மருந்து, நோயும் மயக்கமும் தீர்ப்பது; சாவாமை தருவது; ஆதலின் அமுதம் மருந்தெனப்படும். "வாட்டந் தீர்த்திடும்" - "வாதை தீர்த்திடும்" என்ற அப்பர் சுவாமிகள் பதிகக் குறிப்பும், "சென்றார் தம்மிடர்தீர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரக் குறிப்பும் காண்க. திருமூலத்தான மகாலிங்க மூர்த்தியின் திருவுருவம் பால் நிறமுடையது; சுயம்புலிங்கம்; மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமி - மருந்தீசர், பால்வண்ண நாதர்; அம்மை - சொக்கநாயகி; பதிகம் - 3.

இது திருமயிலாப்பூரினின்றும் தென் கிழக்கில் கற்சாலை வழி நான்கு நாழிகையளவில் அடையத்தக்கது. மோட்டார் பாஸ் வசதிகள் உண்டு. கடற்கரைத் தலம். சென்னையினின்றும் எட்டு நாழிகை யளவுண்டு.

1597.

வரைவளர்மா மயிலென்ன மாடமிசை மஞ்சாடுந்
தரைவளர்சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வணங்கி,
யுரைவளர்மா லைகளணிவித் துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த் திருவொற்றி யூர்சேர்ந்தார்.

332

(இ-ள்.) வரைவளர் மாமயில் என்ன - மலைமேல் வளர்கின்ற பெரிய மயில்போல; மாடம் மிசை மஞ்சு ஆடும் - மாடங்களின்மேல் மேகம் தவழ்கின்ற; தரைவளர்...வணங்கி - உலகில் வளரும் சிறப்பினை உடைய திருமயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள சங்கரனாருடைய பாதங்களை வணங்கி; உரைவளர்...அணிவித்து - உரை பெருகும் தமிழ் மாலைகளைச் சாத்தி; உழவாரப் படையாளி.... சேர்ந்தார் - திரு உழவாரப் படையினை ஏந்திய நாயனார் அலைகள் தவழ்கின்ற கடற்கரையின் வழியே சென்று திருவொற்றியூரினைச் சேர்ந்தருளினார்.

(வி-ரை.) வரைவளர்...மஞ்சு ஆடும் - மலையின்மேல் ஆடுவதுபோல மாடங்களின் மேல் மேகந் தவழ்கின்றன என்பது உருவும் மெய்யும் தொழிலும் பற்றி வந்த உவமம். வரை - மாடத்துக்கும், மயில் - மஞ்சுக்கும், வளர்தல் ஆடுதக்கும் உவமையாயின. வரை - மாடம் - உருவுமம்; மயில் - மஞ்சு மெய்யுவமம்; வளர்தல் - ஆடுதல் - தொழிலுவமம். அம்பிகை மயிலுருவம் கொண்டு இத்தலத்திற் சிவபெருமானைப் பூசித்தனராதலின் மயிலாப்பூர் எனப் பெயர் வந்ததென்பர். அவ்வரலாற்றுக் குறிப்பும் பெறக் கூறிய வுவமைநயம். கண்டுகொள்க.