மானக்கஞ்சாறர் அஞ்சாது அடிகள் பஞ்சவடிக்கு ஆம்என்று உரைப்ப அடிவணங்கி நஞ்சார் விழிப்பெண் புதுமணத்தில் நன்னாள் முடித்த நறுங்கூந்தல் நெஞ்சார் மகிழ்ச்சி யுடன்அரிந்து நீட்டி உலகில் நீண்டகொடை மஞ்சார் மானக் கஞ்சாறன் வாழ்வாம் சோழ மண்டலமே | 18 |
கஞ்சாறு என்னும் ஊரில் மானக்கஞ்சாறர் என்பவர் வாழ்ந்து வந்தார். நெடுநாள் மகப்பேறின்றி இறையருளால் பெண் மகவொன்றைப் பெற்றார். அவளைச் சிறப்புடன் வளர்த்துவந்தார். அப்பெண்ணை ஏயர்கோன் கலிக்காமருக்கு மணம் பேசினர். திருமணத்திற்கு முதல்நாள் அடியார் வடிவில் வந்த சிவபெருமான் மானக்கஞ்சாறர் மகளின் கார்மென் கூந்தலைக் கண்டு தன் பஞ்சவடி என்ற பூணூலுக்கு ஆகும் எனக் கேட்டார். தன் உடைவாளால் மகள் கூந்தலை அரிந்து நீட்டினார். அப்போது அடியார் மறைந்தார். சிவபெருமான் மழவிடைமேல் காட்சி தந்தார். இளையான்குடிமாறர் இளையான் இளையான் குடிமாறன் இரவில் தெறிந்த முளைவாரி முளையா அமுதின் அமுதளிப்ப முக்கண் பெருமான் பசிதீர்ந்தே கிளையா விடைமேல் தோன்றுதலும் கேடி லாத பதம்சேர்ந்தோன் வளையா மகிமை படைத்ததன்றோ வளம்சேர் சோழ மண்டலமே | 19 |
இளையான்குடி என்னும் தலத்தில் தோன்றிய மாறன் என்பார் சிவபக்தி மிக்குடையவராகத் தம் செல்வத்தையெல்லாம் சிவ தன்மத்திலேயே செலவழித்து ஏழையானார். ஒருநாள் சிவபெருமான் மழைபொழியச் செய்து அடியார் வடிவில் மாறன் இல்லம் வந்தார். அவரை வரவேற்று இருக்கச்செய்து தன் துணைவியாரை வினவினார். மனையாட்டி அன்று விதைத்த நெல்முனையை நினைவுபடுத்தினார். இறைகூடை கொண்டு நள்ளிருளில் காலினால் வழிதடவிச் சென்று நெல்முளை வாரிக் கொணர்ந்து மனைவியிடம் கொடுத்தார். அம்மையார் அதனை வாங்கி சேறு நீக்கி வறுத்து அரிசியாக்கிச் சமைத்து அடியவர்க்குப் படைக்க எண்ணி எழுப்பினர். அங்கு சோதி தோன்றியது. சிவபெருமான் மடிவிடைபோல் காட்சி தந்தார். இளையான்குடி பாண்டி நட்டுத் தலம் என்றும் கூறுவர். |