பக்கம் எண் :

சோழமண்டல சதகம்7

நல்லடியார்

பூமாது இருக்கும் பசும்துளவப்
          புயமால் உந்தி பூத்தமறைக்
கோமான் திருத்தாள் மலர்உதித்த
          குணத்தோர் சற்சூத் திரகுலத்தோர்
ஆமாறு உலகில் பல்லுயிர்க்கும்
          அனைய கொழுமீ தியின்அளிக்கும்
மாமாது உறைசோ ழியர்வாழ்வு
          வளஞ்சேர் சோழ மண்டலமே
9

திருமாலின் உந்தியில் உதித்த பிரமனின் கால்களில் தோன்றிய நல்லடியார் வேளாளர்கள். அச் சோழிய வேளாளர்கள் உழவால் உலகம் காக்கின்றனர். (வேளாளர்கள் சற்சூத்திரர் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளனர்).

வேளாளர், காவிரி

நீதி தழைத்த மன்னவரின்
          நெடிய சோழன் நிறைந்தகொழு
மீதி தழைத்த மனைவாழ்க்கை
          வேளாண் குடியார் சோழியரே
பூதி தழைத்த பலநதியில்
          பொன்னி நதியே பூமியில்பூ
மாது தழைத்த மண்டலத்தில்
          வளஞ்சேர் சோழ மண்டலமே
10

உலக மன்னரில் நீதியில் சிறந்தவர்கள் சோழமன்னர். அவர் நாட்டு உழுகுடிகளாம் வேளாளர்கள் மிகச் சிறந்த வாழ்வுடையவர்கள். அவர்கள் நல்வாழ்வுக்குக் காரணமாய் அமைந்து பல நதிகளுட் சிறந்த காவிரியாறு.

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்

என்று சோழநாட்டு வேளாளரை இளங்கோவடிகள் பாராட்டுவார் (10 : 148 - 150)

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்.

எனக் காவிரியை இளங்கோவடிகள் சிறப்பித்து (10:102 - 109) இது ‘தெய்வக் காவிரியின் தீதுதீர் சிறப்பு’ (10 : கட்டுரை 8) என்பார்.

உழவர் ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்
விழவர்ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய்வாழி காவேரி

என்று காவிரி உழவர்க்குப் பயன்படுவதை இளங்கோவடிகள் குறிப்பார் (7:2:4)