பக்கம் எண் :

முன்னுரை5


                       முன்னுரை

     தமிழ் இலக்கியத்தில் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுண்டு.
அவற்றுள் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்தல்
அல்லது வழிப்படுத்தல் என்ற பொருளையுடையது.

     ஒரு புலவன் ஒரு கொடைவள்ளலிடம் செல்கின்றான். சென்று பரிசில்
பெற்று மீளுகின்றான். திரும்பி வரும் வழியில் தன்னெதிரே இன்னொரு
புலவனைக் காண்கின்றான். அவனும் பரிசில் பெற விரும்புகிறான். இல்லை
யென்னாது அளிக்கும் கொடைவள்ளலைத் தேடியே அலைந்து திரிகின்றான்.
இந்நிலையில்தான் இரு புலவரும் சந்திக்கின்றனர். பரிசில் பெற்ற புலவன்
தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றப் புலவனுக்கு எடுத்துக்
கூறுகின்றான். கூறித் தான் சந்தித்த புலவனை அக் கொடை வள்ளலிடம்
செல்லுமாறு       கூறுகின்றான்.   வழிப்படுத்துகின்றான்.   இங்கனம்
வழிப்படுத்துகையில் அவன் வழி தவறாது செல்லும் பொருட்டு வழியின்
இரு மருங்கிலும் உள்ள சில, பல குறிகளைக் குறிப்பிடுகின்றான். இயற்கைக்
காட்சிகளைச் சுட்டிக் காட்டுகின்றான். இவை போன்ற இன்னும் பல
அறிகுறிகளை எடுத்தோதுகின்றான். இவ்வாறு ஆற்றுப் படுத்தப்படுவோர்
கூத்தர், பாணர், பொருநர், விறலியர், புலவர் முதலியோர் ஆவர்.

     ஆற்றுப்படை இலக்கணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற பல நூல்கள்
சங்க காலத் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன. சங்ககாலப் பத்துப்
பாட்டுள் ஐந்து, ஆற்றுப்படைகளாக அமைந்துள்ளன. தொகை நூல்களுள்
ஒன்றான புறநானூற்றிலும் ஆற்றுப்படைத் துறையில் பாடப்பட்ட பல
செய்யுட்கள் மிளிர்கின்றன. எனவே தமிழ்ப் பிரபந்தங்களுள் ஆற்றுப்படை
மிகப் பழமை வாய்ந்தது எனலாம். சங்க காலத்துக்குப் பின் ஆற்றுப்படை
இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற பாட்டுக்கள்
தோன்றுவது அரிதாயிற்று. புண்ணியராற்றுப்படை, காதலி ஆற்றுப்படை
போன்றவை பிற்காலத்திலே தோன்றியவையாம்.