மதுரைத்
தமிழ்ச் சங்கத்துள் நிறுவப்பட்டிருக்கும் அச்சகம் எவ்வாறு
இயங்குகின்றது என்பது இவ்வாற்றுப் படையில் குறிக்கப்பட்டுள்ளது.
அச்சகத்தில் தமிழ், சங்கதம், ஆங்கிலம் ஆகிய எழுத்துக்கள் இருக்கின்றன.
அவ்வச்செழுத்தின் கீழ்க் கட்டையைத் தமக்காதாரமாகக் கொள்ளும்படி
வார்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பகுதிகளாகச் செய்யப்பட்டுள்ளது. பல
பிரதிகள் இயற்றக்கூடிய ஆற்றல் அவ் வச்சகத்துக்கு இருந்தது. ஒரு பிரதி
பல பிரதிகளாய் எங்குஞ் சென்று பொருந்தப் பதிப்பிக்கும் அச்சுச்
சாலையாகும்.
தென்
மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
மீங்கு நனி பாய வாங்கிலாக் கரமுங்
கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி
யொன்று பல வாகிச் சென்றுறப் பதிக்கு
மச்சுச் சாலையும்
என்ற அடிகளில் அச்சகத்தைக்
குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.
மதுரைத்
தமிழ்ச் சங்கத்தாரால் அளிக்கப்படும் பட்டங்கள் பரிசில்கள்
பலவும் குறிக்கப்பட்டுள்ளன. பொன் மோதிரம், பொழுதறி கருவி,
காசுமீரமாகிய போர்வை, பணம் முதலியன அத்தகைய பரிசில்களாம். இப்
பரிசல்களைக் கூறும்பொழுதும் மிக நுண்ணிதாக அவற்றை விளக்குகின்றார்
ஆசிரியர்.
இவ்வாற்றுப்படை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்
இயற்றப்பட்டதாயினும் பழங்கால ஆற்றுப்படைகளைப்போல் சொல்நயம்,
பொருள்நயம் அமைந்துள்ளது. இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக்
குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப்படையில் அமைக்காமல்
பாடியிருப்பாரேயானால் இவ்வாற்றுப்படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது
என்றே படிப்போர் எண்ணுவர். நடையும் பெரும்பாலும் சங்ககால
ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சுவை, பொருட்
செறிவு பொதிந்த இப் புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புற
வேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது. ம.மு.உ.
|