தின்பதற்குச் சி்ங்க முழங்குவதால், அம்முழக்கத்தை வீரமுரசாகவும், யானை தன்னினத்தை யழைப்பதற்காகப் பிளிறுவதால் அதனை நியாயமுரசாகவும், மேகம் மழை பெய்வதற்கு முழங்குவதால் அதனைக் கொடைமுரசாகவும் மூன்று வகையாகக் கொள்க. 122, 123 : என்றும் அவன் .............ஆணை தரித்தோன் (சொ - ள்.) எக்காலத்திலும் "அவன் அசையாமல் ஓர் அணுவும்கூட அசையாது" என்ற பழமொழிப்படி தவத்தால் நிலைபெற்ற ஆணையையுடையோன். (வி - ம்.)அணுவும் அவன் "அசையவேண்டும்" என்று கருதினால்தான் அசையும்; மலையும் அவ்வாறுதான். எல்லாப் பொருள்களும் இறைவன் ஆணையின்றி இயங்கா. திருவுள்ளம் கருதியபடி எல்லாப்பொருள்களும் இயங்கும். தமக்கென்று செயலுடையன அல்ல என்னும் கருத்துத் தோன்ற, "அவன் அசையாமல் அணு அசையாது" என்று சொல்லுகின்ற ஆணையையுடையவன் என்றார். 123-127 : நவநீதம் மேனியிற் .............மெய்யான் (சொ - ள்.) உடம்பின் மேல் தெறித்த வெண்ணெயும் மெல்லிய தன் கையில் எடுத்த வெண்ணெயும் வானத்தில் தோன்றும் விண்மீன்களும் வெண்ணிலாவும்போலத் தோன்றும்படி உறியில் இருந்த வெண்ணெயை எடுத்து உண்டவன் ; சிவந்த சூரியனும் வெள்ளிய சந்திரனும் என்ன இரண்டு விழிகளும், சங்குசக்கரமும் தாங்கியவன் ; அழகிய இடம் பரந்த உலகத்தையெல்லாம் உண்ட கோவைக்கனி போன்ற சிவந்த வாயையுடையவன்; அவ்வுலகங்கள் தங்கியிருக்கும் திருவயிற்றையுடையவன்; தான் முதலில் உண்ட படியே அவ்வுலகங்களையெல்லாம் ஈன்ற திருவுந்தியையுடையவன்; நெருங்கி அவ்வுலகங்களை அளந்த திருப்பாதங்களையுடையவன்; முற்காலத்தில் மாவலிபாற் சென்று "மூன்றடி மண்வேண்டும்" என்று வேண்டி ஏற்றுக்கொண்ட கையையுடையவன் ; அப்பூமியில் விளைந்த பச்சைப் பயிர்களின் வடிவம்போன்ற பசிய நிறமுடைய திருமேனியுள்ளவன். |