பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
150

 
  1`நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்`

    என்னுஞ்  சூத்திர  விதியால்  ஆண்டுக்  கூறியது  நாடக  வழக்கு. ஈண்டுக்
கூறியது உலகியல் வழக்கென்றுணர்க. பற்றுக்கோடு அவாய் நிலையான் வந்தது.
(154)    
கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல்:
     கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல் என்பது நெஞ்சொடு கூறல்.

  ஏவல ரேய்விழி மாந்தளிர் மேனிய ரேனலினிக்
காவல ரேமனங் காத்தனம் யாங்கனி யானைசெம்பொன்
நாவல ரேபெற நல்குங்கை மேக நறுங்குவளை
மாவல ரேய்தொடை யான்றஞ்சை வாணன் வரையில்வந்தே.

     (இ-ள்.) மனமே!  ஏவும்  மலரும் போன்ற விழியினையும் மாந்தளிர்போன்ற
மேனியையும்  உடைய  அவர்  இனித்தினைப்  புனங்   காப்பாரல்லர்;   களித்த
யானையும்  செம்பொன்னும்  நாவலர்பெறக்  கொடுக்குங்  ெகையையுடைய மேகம்
போன்ற  நறுங்  குவளையினது  கரிய  மலர்  பொதிந்த  மாலையணிந்தவனாகிய
தஞ்சைவாணன் வரையிடத்து வந்து நாம் வீணே காத்தனம் என்றவாறு.

     ஏ-அம்பு.    ஏவலர் - எண்ணும்மை தொக்கு நின்றது.    ஏய்தல் - ஒப்பு.
`மாந்தளிர் மேனியர்` உவமைத்தொகை.   ஏனல் - தினை.     இனி - இனிமேல்.
காவலர் - காப்பாரல்லர். `யானை செம்பொன்` எண்ணும்மைத் தொகை. மாவலர் -
கரிய மலர். ஏய்தல் - பொதிதல். மனம்: அண்மைவிளி.
(155)    
     கிழவோன்  பிரிந்துழிக் கிழத்தி  மாலையம்பொழுது கண்டிரங்கலும், பாங்கி
புலம்புதலும்,  தலைவனீடத்   தலைவி   வருந்தலும்   முன்னிலைப்   புறமொழி
மொழிதலும்,  பாங்கியொடு  பகர்தலும்  நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கலும்,
கிழவோன்  தஞ்சம் பெறாது நெஞ்சோடு கிளத்தலும் ஆகிய ஏழும்  இரங்கற்குரிய.
தலைவியைப் பாங்கி கழறலும்,  தலைவியைப்  பாங்கி  அச்சுறுத்தலும்,  தலைவிக்
கவன்வரல்  பாங்கி சாற்றலும் ஆகிய மூன்றும்  வன்புறைக்குரிய.  `சிறைப்புறமாகச்
செறிப்பறி வுறத்தல்` முதல் நான்குவிளவியும் இற்செறிப்பு உணர்த்தற்கு  உரியவாறு
காண்க.

ஒருசார் பகற்குறி முற்றிற்று.

1. தொல். பொருள். அகத்திணையியல் - 53.